×
 

பிரதமர் மோடி தலைமையில் மீட்டிங்..!! மத்திய கிழக்கு பதற்றம், அமைச்சரவை மாற்றம் குறித்து முக்கிய விவாதப் பொருள்..!!

இந்தியாவில் ஏற்படும் பொருளாதார தாக்கம் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரிய அளவில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் உலகப் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் உள்ள சேவா தீர்தத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சர்வதேச சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய உடனேயே பிரதமர் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவிருப்பதால், அனைத்து மத்திய அமைச்சர்களும் டெல்லியிலேயே தங்கியிருக்குமாறு உயர்மட்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள், தனிப் பொறுப்பு இணை அமைச்சர்கள் மற்றும் பிற இணை அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து நிலவும் போர் பதற்றம் மற்றும் அதனால் இந்தியப் பொருளாதாரத்தின் மீது ஏற்படக்கூடிய பல்வேறு தாக்கங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் இன்னும் அணுகுமுறைக்கு வராத நிலையில், உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடர்பாடுகள், உள்நாட்டு பணவீக்க அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அமைச்சரவை விரிவாக ஆராயும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும் பகுதியை இறக்குமதி செய்யும் நாடு என்பதால், மத்திய கிழக்கு நிலவரம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் அம்சங்கள் குறித்து அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்கவுள்ளனர்.

இதையும் படிங்க: 4 நாள் அரசுமுறை பயணம்! இந்தியா வந்திறங்கினார் சைப்ரஸ் அதிபர் நிகோஸ்!

மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்படும் வாய்ப்பும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என மத்திய அரசின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்துக்குள் நிகழக்கூடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து புதிய முகங்கள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற பேச்சும் அரசியல் அரங்கில் காற்றில் பரவியுள்ளது.

இந்தக் கூட்டம் நாட்டின் தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நடைபெறுவதால், மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது பொதுமக்கள், தொழில்துறை மற்றும் பங்குச் சந்தை ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். எரிபொருள் விலை ஏற்ற இறக்கம் கட்டுப்படுத்துதல், உணவுப் பொருள் பணவீக்கத்தை குறைத்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களும் இந்த ஆலோசனையில் இடம்பெற வாய்ப்புள்ளது. பிரதமர் மோடியின் சர்வதேச சுற்றுப்பயணத்தின் போது பெற்ற பல புரிந்துணர்வுகளும் இந்தக் கூட்டத்தில் பகிரப்பட்டு, உள்நாட்டு கொள்கைகளுடன் இணைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share