பாக்.-க்கு எதிரான சிந்தூர் நடவடிக்கை..!! நிறைவடைந்தது ஒரு வருடம்..!! பிரதமர் மோடி செய்த செயல்..!!
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேசன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொடூரச் செயலுக்கு எதிராக இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுக்க முனைந்தது. அதன்படி, மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்திய விமானப்படையின் துல்லியமான தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின. இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் வெளிப்படுத்திய வீரமும் துல்லியமும் உலக அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியதன் ஒராண்டு நிறைவை இன்று நாடு முழுவதும் நினைவுகூர்கிறது. இந்த முக்கிய தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடகக் கணக்குகளின் முகப்புப் படத்தை மாற்றியுள்ளார். புதிய படத்தில் இந்திய தேசியக் கொடி பெருமையுடன் இடம்பெற்றுள்ளது. மேலும், ‘சிந்தூர்’ என்ற சொல்லில் ‘ஓ’ எழுத்து திருமணமான இந்துப் பெண்களின் நெற்றியில் அணியும் குங்குமத்தால் நிரப்பப்பட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தேசப் பாதுகாப்பு மற்றும் பாரம்பரியக் கலாச்சாரத்தின் இணைப்பாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஒரு ஆண்டுக்கு முன்பு நமது பாதுகாப்புப் படைகள் தங்களது அசாத்திய வீரத்தால் நாட்டைப் பாதுகாத்தனர். பயங்கரவாதிகளுக்கு உரிய பாடம் புகட்டினர். ஒவ்வொரு இந்தியனும் அவர்களின் தியாகத்திற்கு நன்றியுடன் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார். மேலும், “ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை நினைவுகூரும் வகையில் அனைத்து இந்தியர்களும் எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்களது டிஸ்ப்ளே படத்தை இந்த சிறப்புப் படத்திற்கு மாற்றி, பாதுகாப்புப் படைகளுக்கு மரியாதை செலுத்துமாறு” அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கை தேசிய ஒற்றுமை, பாதுகாப்புப் படைகள் மீதான நம்பிக்கை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான போக்கை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் எதிர்கால பாதுகாப்பு உத்திகளில் ஒரு முக்கிய அத்தியாயமாக நிலைத்திருக்கும்.
இதையும் படிங்க: கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!