ஃபாரின் ட்ரிப்புக்களுக்கு கூடுதல் வரி விதிப்பு?! துளி கூட உண்மையில்லை! பிரதமர் மோடி மறுப்பு!
வெளிநாட்டுப் பயணங்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவலை பிரதமர் மோடி நிராகரித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டுப் பயணங்களுக்கு புதிய வரி அல்லது கூடுதல் செஸ் வரி விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலை முழுமையாக நிராகரித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, எரிபொருள் சிக்கனம் குறித்து மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். “பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள். பொது போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள். ஒரு ஆண்டுக்கு வெளிநாட்டு சுற்றுலாவைத் தவிருங்கள்” என அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தப் பேச்சுக்குப் பிறகு, வெளிநாட்டுப் பயணங்களுக்கு புதிய வரி விதிக்க அரசு திட்டமிடுவதாக செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பரவின. இந்த தகவல் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நீட் தேர்வு விவகாரம்... விடிந்ததுமே மிக கவலையோடு மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு... டெல்லி பறந்த முக்கிய கடிதம்...!
இந்நிலையில், பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இது முற்றிலும் பொய்யான தகவல். இதில் ஒரு துளி கூட உண்மை இல்லை. வெளிநாட்டுப் பயணங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படாது. வணிகத்தை எளிதாக்குவதிலும், மக்களின் வாழ்வை மேம்படுத்துவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என தெளிவுபடுத்தினார்.
மேற்காசியப் போர் நெருக்கடி காரணமாக எரிபொருள் விலை உயர்வு அச்சம் ஏற்பட்டுள்ள சூழலில், சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் பிரதமர் விடுத்த அழைப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், இந்த அழைப்பை தவறாகப் புரிந்துகொண்டு வரி விதிப்பு தகவல் பரவியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பிரதமரின் இந்த மறுப்பு, மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுப் பயணங்கள், வியாபார நோக்கிலான பயணங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து எந்தத் தடையுமின்றி நடைபெறும் என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது. எரிபொருள் சிக்கனத்துக்காக மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே பிரதமரின் முக்கிய வேண்டுகோளாக உள்ளது.
இந்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது!! 1000 ஆண்டுகளுக்கு உத்வேகமாகத் திகழும் - மோடி பெருமிதம்!