×
 

இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை! கேரள தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!

இந்தியப் பொருளாதாரம் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யத் தனது அரசு அயராது உழைத்து வருவதாக பிரதமர் மோடி பேச்சு.

கேரளாவில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, பாலக்காடு மற்றும் திருச்சூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று உரையாற்றினார். முன்னதாக திருச்சூரில் உற்சாகமான ரோட் ஷோ நடத்திய அவர், பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

மத்திய கிழக்கில் போர் தொடங்கிய முதல் நாள் முதல், நான் உலகத் தலைவர்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருந்து வருகிறேன். இந்தப் போரினால் இந்தியாவில் எத்தகைய பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பிரதமர் தெரிவித்தார்.

மோதல் நிறைந்த பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் அரசின் முதல் முன்னுரிமை என்றும், அவர்களைப் பத்திரமாக தாயகம் அழைத்து வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

இதையும் படிங்க: ஆதரவு திரட்ட கேரளா வரும் பிரதமர் மோடி..!! கோவையில் முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை..!!

சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதாரச் சவால்களை இந்தியா எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனைச் சமாளித்து, சாமானிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு நான்-ஸ்டாப் வேலை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வருவதால், அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்துக் கேரள மக்களுக்குப் பிரதமர் மோடி இந்த உரையின் மூலம் பெரும் நம்பிக்கையை அளித்தார்.

கேரளாவில் மும்முனைப் போட்டி நிலவி வரும் வேளையில், பிரதமரின் இந்த உரை அங்கே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாக வைத்துப் பாஜக தனது பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. முன்னதாகக் கோவை விமான நிலையத்தில் தன்னை வரவேற்ற அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளிடம் தேர்தல் களம் உற்சாகமாக இருப்பதாகப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் திமுக தனது 524 வாக்குறுதிகள் கொண்ட சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள நிலையில், கேரளாவில் சர்வதேச விவகாரங்களை முன்னிறுத்திப் பிரதமர் மோடி தனது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: மேற்கு ஆசிய போர்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share