மாணவர்களின் திறமையை கண்டுபிடியுங்கள்! ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரை!
குழந்தைகளை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் அதிகம் ஈடுபடுத்தினால், அவர்களின் கவனம் பயனுள்ள விஷயங்களில் திரும்பும் என்றும் அவர் கூறினார்.
புதுடெல்லி: மாணவர்களின் திறமைகளை ஆசிரியர்கள் கண்டறிந்து, அவர்களை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி தனது இல்லத்தில் தேசிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கல்வியுடன் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
குழந்தைகளின் அதிகப்படியான ஸ்கிரீன் டைம் பழக்கத்தை குறைக்க வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார். குழந்தைகளை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் அதிகம் ஈடுபடுத்தினால், அவர்களின் கவனம் பயனுள்ள விஷயங்களில் திரும்பும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: மெலோனி–மோடி நட்பு மீண்டும் டிரெண்டிங்! இத்தாலி பிரதமருக்கு கிடைத்த ஸ்பெஷல் வாழ்த்து!
மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை ஆசிரியர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார். குறிப்பாக, ஒரு குழந்தைக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் இருப்பது தெரியவந்தால், அந்த திறனை வளர்க்க தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அவர் கூறினார். இதுபோன்ற செயல்பாடுகள் சில மாணவர்களை போதைப்பழக்கம் போன்ற பாதிப்புகளில் இருந்து விலகி இருக்க உதவக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பொறுப்பு இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். விதிமுறைகளை மட்டும் அறிவிப்பதைவிட, போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மாணவர்களின் நடத்தையில் திடீர் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதையும் ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். குழந்தைகளின் வாழ்க்கையுடன் உண்மையாக இணைவதற்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டங்களை தாண்டி ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
குழந்தைப் பருவத்தை பாதுகாத்து, அது மகிழ்ச்சியாகவும் உயிர்ப்புடனும் இருப்பதை உறுதி செய்வதில் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. மாணவர்களின் கல்வியுடன் அவர்களின் திறமை, படைப்பாற்றல் மற்றும் நல்ல பழக்கங்களையும் வளர்ப்பதே ஆசிரியர்களின் முக்கிய பொறுப்பு என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள்! பாஜக மெகா பிளான்! வாட்நகரில் இருந்து வாரணாசி வரை அடுத்தகட்ட திட்டம்!