×
 

புகையிலை பழக்கம் ஒழிந்தால் 2 கோடி குடும்பங்கள் வளம்பெறும்! மருத்துவ இதழின் ஆய்வில் தகவல்!

நாட்டில் புகையிலைப் பழக்கம் முழுமையாக குறைந்தால், கோடிக்கணக்கான குடும்பங்களின் பொருளாதார நிலை மேம்படும் என புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (British Medical Journal) வெளியிட்டுள்ள இந்த ஆய்வு, இந்திய சமூக-பொருளாதார நிலையைப் பற்றி முக்கியமான தகவல்களை வெளிப்படுத்துகிறது.

இந்த ஆய்வை டாடா சமூக அறிவியல் நிறுவனம் (Tata Institute of Social Sciences) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) இணைந்து மேற்கொண்டுள்ளன. மேலும், நொய்டாவில் செயல்படும் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இதற்கான தரவுகளை வழங்கியுள்ளது.

2022-23ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட 2.61 லட்சம் குடும்பங்களின் வருமானம், செலவு மற்றும் வாழ்க்கை முறைகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: துடைக்கும் போது வெடித்த துப்பாக்கி!! குண்டு பாய்ந்ததில் டி.எஸ்.பி மரணம்! பஞ்சாப்பில் சோகம்!

ஆய்வின் முக்கிய முடிவுகள் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளன. இந்தியாவில் பல குடும்பங்கள் மாதந்தோறும் பீடி, சிகரெட், குட்கா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு கணிசமான தொகையை செலவழித்து வருகின்றன. இந்த செலவினத்தை குறைத்தாலோ அல்லது முற்றிலும் நிறுத்தினாலோ, அந்த தொகையை உணவு, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்த முடியும் என ஆய்வு குறிப்பிடுகிறது.

கணக்குகளின் படி, புகையிலைப் பழக்கத்தை கைவிட்டால் கிராமப்புறங்களில் 11.64 சதவீத குடும்பங்களும், நகர்ப்புறங்களில் 7.26 சதவீத குடும்பங்களும் பொருளாதார முன்னேற்றம் காணலாம். குறிப்பாக, ஏழை குடும்பங்களில் 12.4 சதவீதமும், நடுத்தர வருமானக் குடும்பங்களில் 16.8 சதவீதமும் வாழ்க்கைத் தரம் உயரும் வாய்ப்பு உள்ளது.

இந்த மாற்றம் மூலம் 2 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் நேரடியாக பயன் அடையக்கூடும் என ஆய்வு கூறுகிறது. இது வெறும் சுகாதார நன்மை மட்டுமல்லாமல், பொருளாதார முன்னேற்றத்துக்கும் புகையிலை கட்டுப்பாடு முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது.

நிபுணர்கள் கருத்துப்படி, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு, அதிக வரி விதிப்பு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் இந்த இலக்கை அடைய முடியும். இல்லையெனில், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்கள் தேவையற்ற செலவில் சிக்கிக் கொண்டே இருப்பர் என்பதும் எச்சரிக்கையாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share