Emi கட்டும் மக்களுக்கு ஒரு இன்பசெய்தி! குறைந்தது ரெப்போ விகிதம்! இனி குறையும் வட்டி!
வங்கிக்களுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சென்னை: பொதுமக்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மிகப் பெரிய நற்செய்தியை ரிசர்வ் வங்கி இன்று வழங்கியுள்ளது. வங்கிகளுக்கு குறுகிய காலத்தில் வழங்கப்படும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால் தற்போது ரெப்போ விகிதம் 5.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக இறங்கியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வந்தது. அதன் உச்சமாக 2024 பிப்ரவரியில் ரெப்போ ரேட் 6.50 சதவீதம் வரை சென்றது. ஆனால் தற்போது பணவீக்கம் கணிசமாகக் குறைந்து 4.8 சதவீதமாகவும், பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாகவும் உயர்ந்திருப்பதால், வட்டி விகிதங்களைக் குறைக்கும் பயணத்தை ரிசர்வ் வங்கி மீண்டும் தொடங்கியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா நிருபர்களிடம் பேசுகையில், “பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிட்டது. பொருளாதாரம் நல்ல வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் கடன் செலவைக் குறைத்தால், நுகர்வும் முதலீடும் அதிகரிக்கும். அதனால்தான் ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்க முடிவு செய்தோம்” என்று தெளிவாக விளக்கினார்.
இதையும் படிங்க: நெல்லையை குலை நடுங்க வைத்த சம்பவம்... காவலரை ஓட, ஓட அரிவாளால் வெட்டிய நபர் அதிரடி கைது...!
இந்த ஒரு முடிவு இலட்சக்கணக்கான கடன் வாங்கியவர்களின் வாழ்க்கையையே மாற்றப் போகிறது. வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், கல்விக் கடன், தங்கக் கடன் என எல்லா வகை கடன்களுக்கும் விரைவில் வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இப்போது வீட்டுக் கடன் வட்டி 9 முதல் 9.5 சதவீதம் வரை இருக்கிறது. இது விரைவில் 8.5 சதவீதத்திற்கும் கீழே இறங்க வாய்ப்பு உள்ளது. 50 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் மாதந்தோறும் 2,500 முதல் 3,500 ரூபாய் வரை குறைவாகச் செலுத்த வேண்டி வரும். அதேபோல் கார் கடன் வட்டியும் 0.5 முதல் 0.75 சதவீதம் வரை குறையும்.
வங்கிகள் பெரும்பாலும் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட வட்டி விகித முறையை (Repo Linked Lending Rate) பின்பற்றுவதால், பழைய கடன்களுக்கே தானாகவே வட்டி குறைவு பிரதிபலிக்கும். அடுத்த 15 முதல் 45 நாட்களுக்குள் பெரிய வங்கிகளான SBI, HDFC, ICICI, Axis போன்றவை புதிய வட்டி விகிதங்களை அறிவிக்கத் தொடங்கும். அதன் பிறகு உங்கள் மாதத் தவணை தொகை குறையும் அல்லது கடன் காலம் குறைந்து மொத்த வட்டி செலவு பெருமளவு சேமிக்கப்படும்.
வியாபாரிகளுக்கும் இது பெரிய வரப்பிரசாதம். சிறு-குறு தொழில் கடன்கள், ஏற்றுமதி கடன்கள், தொழிற்சாலை விரிவாக்க கடன்கள் எல்லாமே மலிவாகக் கிடைக்கும். இதனால் புதிய தொழிற்சாலைகள் திறக்கப்படும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும், பொருளாதாரம் மேலும் வேகம் பெறும்.
பங்குச் சந்தையும் இந்த அறிவிப்பைக் கேட்டு உற்சாகத்தில் திளைத்தது. ரியல் எஸ்டேட், வங்கி, ஆட்டோமொபைல், நிதி நிறுவனப் பங்குகள் பெரிய அளவில் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் புதிய உச்சத்தைத் தொட்டன.
வீடு, கார் வாங்க நினைத்துக் கொண்டிருந்தவர்கள்… இப்போதுதான் உங்களுக்கான சரியான நேரம். இன்னும் 2026-ல் மேலும் ஒரு சில கட்ட குறைப்புகள் வரலாம் என்று பொருளாதார வல்லுநர்களும் கணித்திருக்கிறார்கள். எனவே தயக்கம் வேண்டாம், வங்கிக்குச் சென்று உங்கள் கனவை நிஜமாக்குங்கள்!
இதையும் படிங்க: “எய்ம்ஸ், மெட்ரோ வேணுமா? திருப்பரங்குன்றம் தீபம் வேணுமா?” - மதுரை மக்களே முடிவு பண்ணுங்க... மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்...!