மக்களை ஏமாற்றும் புது டெக்னிக்..!! கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை நம்பாதீங்க..!! RBI வார்னிங்..!!
கடன் தள்ளுபடி பெற்றுத் தருவதாகக் கூறும் நபர்களையோ அல்லது அங்கீகரிக்கப்படாத அமைப்புகளையோ தொடர்பு கொள்ள வேண்டாம்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று தவறான தகவல்களைப் பரப்பி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி அமைப்புகளுக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி மக்களிடமிருந்து பணம் பறிக்கும் இத்தகைய தவறான பிரசாரங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்த மோசடியாளர்கள், சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட தளங்களில் செய்திகளைப் பரப்பி, “உங்கள் கடன் முழுமையாக ரத்து செய்யப்பட்டுவிட்டது” அல்லது “அரசு சிறப்புத் திட்டத்தின் கீழ் தள்ளுபடி” என்று மக்களை நம்ப வைக்கின்றனர். பின்னர் அங்கீகாரம் இல்லாத “கடன் தள்ளுபடி சான்றிதழ்” அல்லது “நோட்டீஸ்” என்ற பெயரில் ஆவணங்களை வழங்கி, சேவை கட்டணம், சட்ட ஆலோசனை கட்டணம், செயல்முறை கட்டணம் உள்ளிட்ட பெயர்களில் பல ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
உண்மையில் இத்தகைய எந்தத் தள்ளுபடியும் நடைபெறாத நிலையில், மக்கள் பணத்தை இழப்பதோடு, வங்கிகளுக்கு அசல் கடனையும் வட்டியையும் தொடர்ந்து செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆர்.பி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கிகள் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) வழங்கும் கடன்களுக்கு எந்தவிதமான தானியங்கி தள்ளுபடியும் இல்லை. அரசு அல்லது ரிசர்வ் வங்கியின் எந்தத் திட்டத்திலும் இத்தகைய பொதுத் தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை” எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆரம்பிக்கிது தங்கவேட்டை! இந்தியா வருகிறது பல மெட்ரிக் டன் தங்கம்! ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!
ஒருசில விவசாயக் கடன் தள்ளுபடி அல்லது பேரிடர் நிவாரணத் திட்டங்கள் போன்ற குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே அரசு தள்ளுபடி அறிவிக்கும் என்பதையும் RBI நினைவூட்டியுள்ளது.மோசடியாளர்கள் பெரும்பாலும் போலி வழக்கறிஞர்கள், நிதி ஆலோசகர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். சிலர் “உச்ச நீதிமன்ற உத்தரவு” அல்லது “ஆர்.பி.ஐ. சுற்றறிக்கை” என்று பொய்யான ஆவணங்களைக் காட்டி மக்களை நம்ப வைக்கின்றனர். இத்தகைய மோசடிகளில் சிக்கும் மக்கள், பணத்தை இழப்பதோடு கடன் சுமையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
ஆர்.பி.ஐ. அறிவுறுத்தல்:
- கடன் தள்ளுபடி வாக்குறுதி அளிக்கும் எந்த நபர் அல்லது அமைப்பையும் தொடர்பு கொள்ள வேண்டாம்.
- அத்தகைய சான்றிதழ்கள் அல்லது நோட்டீஸ்களுக்கு எந்த மதிப்பும் இல்லை.
- சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக உள்ளூர் வங்கி அதிகாரிகள் அல்லது காவல்துறையை அணுகவும்.
- கடன் தொடர்பான எந்தப் பிரச்சினைக்கும் வங்கியுடன் நேரடியாகப் பேசி தீர்வு காணவும்.
இந்த மோசடிகள் காரணமாக பொதுமக்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திப்பதால், RBI இத்தகைய தவறான பிரசாரங்களுக்கு எதிராக கண்காணிப்பை அதிகரித்துள்ளது. மக்கள் விழிப்புடன் இருந்து, அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்புமாறு வங்கி வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!