×
 

₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

இணைய திருட்டு மற்றும் மோசடிகளை தடுக்க RBI புதிய திட்டம் ஒன்றை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள், குறிப்பாக UPI (Unified Payments Interface) மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடியான புதிய திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது. இதன்படி, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேலான பரிமாற்றங்களுக்கு 1 மணிநேரக் காலத் தாமதத்தைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

UPI, IMPS போன்ற டிஜிட்டல் முறைகளில் ரூ.10,000 அல்லது அதற்கு அதிகமான பணத்தைப் பரிமாற்றம் செய்யும்போது, அது உடனடியாகச் சென்றடையாமல் 1 மணிநேரம் தாமதமாகச் சென்றடையும் வகையில் மாற்றியமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவசரகதியில் அல்லது யாரோ ஒருவரின் கட்டாயத்தின் பேரில் தவறுதலாகப் பணத்தை அனுப்பிவிட்டால், அந்த 1 மணிநேரத்திற்குள் பயனர்கள் அப் பரிமாற்றத்தைத் திரும்பப் பெற (Cancel/Revoke) இது வழிவகுக்கும்.

தற்போதுள்ள 'Authorised Push Payment' மோசடிகளில், மோசடிக்காரர்கள் பயத்தை உருவாக்கியோ அல்லது ஆசை காட்டியோ உடனடியாகப் பணத்தைப் பறிக்கின்றனர். இந்த 1 மணிநேரத் தாமதம், மோசடிக்காரர்கள் பணத்தை உடனடியாக வேறொரு கணக்கிற்கு மாற்றுவதைத் தடுக்கும். மேலும், பாதிக்கப்பட்ட பயனர் காவல் துறைக்கோ அல்லது வங்கியுக்கோ புகார் அளிக்கப் போதிய கால அவகாசம் கிடைக்கும்.

இதையும் படிங்க: உரிமை கோரப்படாத வைப்பு நிதிகள்: இந்திய வங்கிகளில் கிடந்த ஆயிரக்கணக்கான கோடி RBI-க்கு மாற்றம்..!! மத்திய அரசு அதிரடி..!!

சாதாரணக் கடைகளில் செய்யப்படும் சிறு தொகைப் பரிமாற்றங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு (Verified Merchants) செய்யப்படும் பேமெண்ட்களுக்கு இந்த விதி பொருந்தாது எனத் தெரிகிறது. முக்கியமாகத் தனிநபர்களுக்கு இடையே நடைபெறும் (P2P - Person to Person) அதிகப்படியான பணப் பரிமாற்றங்களுக்கு மட்டுமே இது அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50,000-க்கு மேல் பரிமாற்றம் செய்தால், அவர்களால் நியமிக்கப்பட்ட ஒரு நம்பகமான நபர் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அடுக்கு பாதுகாப்பும் பரிசீலனையில் உள்ளது. கில் ஸ்விட்ச் மோசடி நடப்பதாக உணர்ந்தால், ஒரே அழுத்தத்தில் அனைத்து டிஜிட்டல் சேவைகளையும் முடக்கும் வசதி வழங்கப்பட வேண்டும்.

இந்தத் திட்டம் குறித்துப் பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களைக் கோரியுள்ள ரிசர்வ் வங்கி, மே 8-ஆம் தேதிக்குப் பிறகு இறுதி முடிவை எடுத்து வழிகாட்டுதல்களை வெளியிடும். டிஜிட்டல் இந்தியா பயணத்தில் 'வேகத்தை' விட 'பாதுகாப்பிற்கு' அதிக முன்னுரிமை அளிக்க ரிசர்வ் வங்கி எடுத்துள்ள இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share