தொல்லை தாங்கல..!! நாய்க்குட்டிகளை அதிகாரி மேஜையில் விட்ட யுவசேனா!! வித்தியாசமான போராட்டம்!!
வெறும் டெண்டர் நடைமுறைகளிலேயே கவனம் செலுத்தி மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்திலுள்ள நிஃபாட் நகர் பஞ்சாயத்து எல்லைக்குள் தெருநாய்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ள நிலையில், அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து வினோதமான போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
சிவசேனா (யுபிடி) கட்சியின் இளைஞர் அமைப்பான யுவசேனாவின் நாசிக் மாவட்டத் தலைவர் விக்ரம் ரந்தாவே தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டம், சமூக ஊடகங்களில் வீடியோவாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிஃபாட் நகர்ப் பகுதியிலும் சுற்றுவட்டாரங்களிலும் சுமார் 400-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுதந்திரமாகத் திரிவதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மாதந்தோறும் 100-க்கும் அதிகமானவர்கள் நாய்கடிக்கு ஆளாகி மருத்துவமனைக்குச் செல்கின்றனர். நிஃபாட் துணை மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர் ராஜீவ் தம்பலே கூறுகையில், தினசரி ஐந்து முதல் ஆறு பேர் வரை நாய்கடி சிகிச்சைக்காக வருவதாகவும், இதனால் மாதத்திற்கு நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவாவதாகவும் தெரிவித்தார். சிறுவர்கள், முதியோர், பெண்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: மாத்தியாச்சு..! "கனிமொழி ராஜாத்தி கருணாநிதி"..! தாய் பெயரை சேர்த்த நெகிழ்ச்சி சம்பவம்..!!
கணபதி விசர்ஜன விழாக் காலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தபோதும், நாய்களின் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய யுவசேனா தொண்டர்கள், நகர் பஞ்சாயத்து முதன்மை அதிகாரி தீரஜ் பாம்ரேவின் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
சாக்குப்பைகளில் அடைத்துக் கொண்டுவந்த நான்கு முதல் ஐந்து தெருநாய்க் குட்டிகளை மேஜை மீது விட்டனர். பயந்து ஓடிய குட்டிகள் அலுவலகத்தில் பதற்றத்தை உருவாக்கின. அதோடு அதிகாரியின் மேஜை மீது ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையையும் வைத்து, நிர்வாகத்தின் செயலற்ற தன்மையைக் கண்டித்தனர். வெறும் டெண்டர் நடைமுறைகளிலேயே கவனம் செலுத்தி மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
தெருநாய்களைக் கட்டுப்படுத்த உடனடி கருத்தடை முகாம்கள் நடத்த வேண்டும், முறையான பிடிப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வலியுறுத்திய விக்ரம் ரந்தாவே, உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களைத் திரட்டி மீண்டும் அதிகாரியின் அறையிலேயே நாய்களை விடும் பெரிய போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தார்.
முதன்மை அதிகாரி தீரஜ் பாம்ரே, பிரச்சினையை உடனடியாக ஆய்வு செய்வதாகவும், கருத்தடைக்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் உறுதியளித்தார். இந்தச் சம்பவம் நிஃபாட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதிகாரிகளின் பொறுப்புணர்வை வலியுறுத்தும் குரலாகவும் மாறியுள்ளது.
இதையும் படிங்க: மத்திய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!