×
 

மழைக்காலத்தில் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம்.. யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

குழந்தைகளிடம் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவையும் காணப்படலாம்.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) இந்த பருவமழைக் காலத்தில் H1N1 இன்ஃப்ளூயன்சா (பன்றிக் காய்ச்சல்) பாதிப்பு வழக்கத்திற்கு மாறாக கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 229 ஆக இருந்த பாதிப்புகள், இந்த ஆண்டு 1,344 ஆக உயர்ந்து கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. 

டெல்லியின் முன்னணி மருத்துவமனைகளின் வெளிநோயாளிகள் பிரிவில் தினமும் 7 முதல் 10 நோயாளிகள் வரை H1N1 அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த திடீர் உயர்வுக்கு மழைக்காலத்தில் ஏற்படும் வெப்பநிலை குறைவும், காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதமும் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. இவை வைரஸ் கிருமிகள் வேகமாகப் பரவுவதற்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றன. 

கடந்த ஆண்டு H3N2 வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு Influenza A வகையைச் சேர்ந்த H1N1 தீவிரமாகப் பரவி வருகிறது. டெங்கு, கோவிட்-19 மற்றும் சாதாரண சளி-காய்ச்சல் அறிகுறிகளுடன் ஒற்றுமை இருப்பதால், தொடக்கத்தில் பலர் இதைக் கவனிக்காமல் விடுகின்றனர். இதனால் பாதிப்பு மேலும் பரவுகிறது. வைரஸ் தொற்று ஏற்பட்ட 1 முதல் 4 நாட்களுக்குள் திடீர் அதிக காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர், தொடர் வறட்டு இருமல், தொண்டை வலி, மூக்கு அடைப்பு, கடுமையான தலைவலி, தசை-மூட்டு வலி மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும். குழந்தைகளிடம் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவையும் காணப்படலாம்.

இதையும் படிங்க: ஆகஸ்ட் 15க்கு டெல்லி ரெடி! பிரதமர் மோடி உரையாற்றும் செங்கோட்டையை சுற்றி தீவிர கண்காணிப்பு! உச்சக்கட்ட பாதுகாப்பு!

பெரும்பாலானோருக்கு 3-5 நாட்களில் நோய் தானாக சரியாகும். ஆனால் 65 வயதிற்கு மேற்பட்டோர், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், நீரிழிவு-உயர் ரத்த அழுத்தம்-ஆஸ்துமா-இதயம்-சிறுநீரக நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோருக்கு நுரையீரல் அழற்சி அல்லது தீவிர மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் அதிகம்.

மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி அல்லது அழுத்தம், உதடுகள்-நகங்கள் நீல நிறமாதல், சளியில் ரத்தம், ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தல் அல்லது மயக்கம் போன்றவை தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். தடுப்புக்கு அடிக்கடி சோப்பு-தண்ணீரால் 20 வினாடிகள் கைகழுவுதல், இருமும்போது கைக்குட்டை பயன்படுத்துதல், அறிகுறி உள்ளவர்கள் 2-3 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதல் அவசியம். 

ஆன்டிபயாடிக் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இன்றி உட்கொள்ளக் கூடாது. ஆபத்து உள்ளவர்கள் ஆண்டுதோறும் ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பை அதிகரிக்கும். மக்கள் விழிப்புடன் இருந்து, அறிகுறிகள் தென்பட்டால் சோதனை செய்துகொள்ள அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: அமித்ஷா- சுதீஷ் திடீர் சந்திப்பு..! "தமிழக அரசியலில் புதிய சஸ்பென்ஸ்..! பரபரப்பு களம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share