×
 

+2 விடைத்தாள் நகல் அனுப்பும் பணிகள் தாமதம்?! மறுமதிப்பீட்டிற்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? மாணவர்கள் எதிர்ப்பார்ப்பு!

'தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு எழுதியோருக்கு, விடைத்தாள் நகல் அனுப்பும் பணிகள் தாமதமாவதால், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்' என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் விடைத்தாள் நகல் கோரியவர்களுக்கு ஆன்லைன் மூலம் படிப்படியாக நகல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பாடங்களுக்கான விடைத்தாள் நகல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதால், பல மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பாடங்களின் விடைத்தாள்களை இன்னும் பெறாமல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மருத்துவம், பொறியியல் மற்றும் பிற தொழில்முறை படிப்புகளில் சேர திட்டமிட்டுள்ள மாணவர்கள், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களின் விடைத்தாள் நகல்களை எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 16-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

விடைத்தாள் நகல்கள் முழுமையாக கிடைக்காத சூழலில், மாணவர்களும் பெற்றோர்களும் கடும் மனஅழுத்தத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். பொதுவாக மாணவர்கள் விடைத்தாள் நகலை பெற்ற பிறகு, ஆசிரியர்களிடம் காட்டி மதிப்பெண் கணக்கீடு மற்றும் மதிப்பீடு குறித்து ஆலோசனை பெறுவது வழக்கம். அதன்பிறகே மறுமதிப்பீடு அல்லது மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பது குறித்து முடிவு செய்வார்கள்.

ஆனால் தற்போது விடைத்தாள் நகல்கள் தாமதமாக கிடைப்பதால், மாணவர்கள் சரியான முடிவை எடுக்க போதிய நேரம் கிடைக்கவில்லை என்று பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், விடைத்தாள் நகல்களை விரைவாக வழங்குவதோடு, மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்ப காலக்கெடுவையும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மாணவர்களின் எதிர்கால கல்வி வாய்ப்புகள் இந்த மதிப்பெண்களைப் பொறுத்தே அமையும் என்பதால், தேர்வுகள் இயக்ககம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் ஏமாற்றம்!! விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பம்! CBSE தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share