ஹலோ புடின்!! இந்த போரை என்ன செய்ய?! ரஷ்ய அதிபரிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு!!
ஈரான் மீதான தாக்குதல் குறித்து ரஷ்யா அதிபர் புடின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் போனில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே தொலைபேசியில் நீண்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஈரான் மீதான தாக்குதல், ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு மற்றும் உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் இதில் விவாதிக்கப்பட்டன. இந்த அழைப்பு மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிபர் டிரம்ப் நிருபர்களிடம் பேசுகையில், "புடினுடன் மிகச் சிறந்த உரையாடல் நடத்தினேன். உக்ரைன் போர் என்ற முடிவில்லாத சண்டை பற்றி பேசினோம். மத்திய கிழக்கு பதற்றம் குறித்தும் விவாதித்தோம். அவர் உதவியாக இருக்க விரும்புகிறார் என்றார். உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் அவர் இன்னும் அதிகம் உதவ முடியும் என்று நான் சொன்னேன். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று கூறினார்.
ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து டிரம்ப் உறுதியளித்தார். "ஜலசந்தி பாதுகாப்பாக இருக்கும். எங்களிடம் ஏராளமான கடற்படை கப்பல்கள் உள்ளன. கண்ணிவெடிகளை கண்டறியும் உலகின் சிறந்த உபகரணங்கள் எங்களிடம் இருக்கின்றன.
இதையும் படிங்க: ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!
ஈரானின் பெரும்பாலான கப்பல்கள் இப்போது கடலின் அடிப்பகுதியில் உள்ளன. ஒரு பயங்கரவாத ஆட்சி உலகின் எண்ணெய் விநியோகத்தை நிறுத்த முயற்சித்தால் நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் ஏதாவது செய்தால் கடுமையாக தாக்கப்படுவார்கள்" என்று எச்சரித்தார்.
மேலும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் பற்றி பேசிய டிரம்ப், "நாங்கள் தாக்குதல் நடத்தாவிட்டால் அவர்களே நம்மீது தாக்குதல் நடத்தியிருப்பார்கள். அவர்களிடம் ஏவுகணைகள் எதிர்பார்த்ததை விட அதிகம் இருந்தன.
ஆனால் இப்போது அவர்களிடம் இருந்த 80 சதவீத ஏவுகணைகளில் 80 சதவீதத்தை அழித்துவிட்டோம். மிகச் சில ஏவுதளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. நமது ராணுவம் பிரமிக்கத்தக்க சாதனை படைத்துள்ளது. இஸ்ரேலுடன் இணைந்து எதிரிகளை நசுக்கி வருகிறோம்" என்று பெருமிதம் தெரிவித்தார்.
ஈரானின் கடற்படை முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், 46 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். "ஈரானின் பயங்கரவாத தலைவர்கள் ஒழிக்கப்பட்டுவிட்டனர். எஞ்சியவர்களும் விரைவில் ஒழிக்கப்படுவார்கள். எதிரிகள் முழுமையாக தோற்கடிக்கப்படும் வரை ஓயமாட்டோம். இந்த ஆபத்தை ஒரே அடியாக முடிவுக்குக் கொண்டுவர உறுதியுடன் செயல்படுவோம்" என்று வலியுறுத்தினார்.
இந்த போர் ஒரு "சிறிய ராணுவ நடவடிக்கை" என்றும், அது விரைவில் முடிவடையும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். "எனது முதல் ஆண்டு பதவிக்காலம் அமெரிக்க அதிபர்களின் வரலாற்றிலேயே சிறந்ததாக அமைந்துள்ளது. அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றி வருகிறோம்" என்று கூறி, தனது ஆட்சியை புகழ்ந்தார்.
இந்த பேச்சு மற்றும் புடின் அழைப்பு, ஈரான் போர் விரைவில் முடிவடைய வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. உலக நாடுகள் இப்போது ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் எண்ணெய் விலை ஏற்றத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.
இதையும் படிங்க: ஈரான் போர் குறித்து விவாதிக்க வேண்டும்! எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது பார்லி.,!! ஒத்திவைப்பு!