பெட்ரோல் விலை குறையுமா? வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்த டிரம்ப்! அமெரிக்காவின் வரலாற்று ஒப்பந்தம்!
இந்த ஒப்பந்தம் மூலம் வெனிசுலாவின் எண்ணெய் துறையில் சுமார் 100 பில்லியன் டாலர் தனியார் முதலீடு வரலாம் என்றும், அந்நாட்டு அரசுக்கு 209 பில்லியன் டாலருக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கலாம் என்றும் வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.
உலக எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், வெனிசுலாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணெய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுலாவில் உள்ள 17 முக்கிய எண்ணெய் வயல்களில் அமெரிக்காவுக்கு பெரும்பான்மை கட்டுப்பாடு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை “உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்” என்று டிரம்ப் வர்ணித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட உள்ள புதிய தனியார் நிறுவனத்தில் அமெரிக்காவுக்கு சுமார் 55 சதவீத அளவிலான கட்டுப்பாடு கிடைக்கும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் வெனிசுலாவின் 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்த உள்ளது. அந்த வயல்களில் சுமார் 65 பில்லியன் பேரல் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பு இருப்பதாக வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்கா மீது இந்திய மாணவர்களுக்கு குறைகிறது ஆர்வம்? விண்ணப்பங்கள் 15% சரிவு! டிரம்ப் விசா கொள்கையால் அதிர்ச்சி!
வெனிசுலாவின் மொத்த நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பு 300 பில்லியன் பேரலுக்கும் அதிகமாகும். உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடாக இருந்தாலும், பல ஆண்டுகளாக முதலீட்டு பற்றாக்குறை, பழுதடைந்த உள்கட்டமைப்பு, நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் பொருளாதார தடைகள் காரணமாக அதன் உற்பத்தி திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் வெனிசுலாவின் எண்ணெய் துறையில் சுமார் 100 பில்லியன் டாலர் தனியார் முதலீடு வரலாம் என்றும், அந்நாட்டு அரசுக்கு 209 பில்லியன் டாலருக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கலாம் என்றும் வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பெட்ரோல் விலையை குறைப்பதற்கும், நாட்டின் எண்ணெய் இருப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது. ஆனால் வெனிசுலாவின் எண்ணெய் உள்கட்டமைப்பை மீண்டும் சீரமைத்து உற்பத்தியை அதிகரிக்க பல ஆண்டுகள் மற்றும் மிகப்பெரிய முதலீடு தேவைப்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட உடனேயே அமெரிக்காவில் பெட்ரோல் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு மாறானது.
இதற்கிடையே, ஒப்பந்தத்தின் சட்ட வடிவம், முதலீட்டு அமைப்பு மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாடு எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது தொடர்பான முழு விவரங்கள் இன்னும் வெளிப்படவில்லை. இதனால் உலக எண்ணெய் சந்தை மட்டுமின்றி, வெனிசுலாவின் எதிர்கால பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலை குறித்தும் இந்த ஒப்பந்தம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!