அண்ணன் வர்றாரு... விசில் போடு..! திருச்சியில் ஏப்.2 ல் விஜய் வேட்பு மனுத் தாக்கல்...!!
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விஜய் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, புதிதாக உருவான தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளார். மார்ச் 29 அன்று வெளியிடப்பட்ட த.வெ.க. வேட்பாளர் பட்டியலில், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய அவர், நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 2-ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க. சார்பில் விஜய் போட்டியிடுவது உறுதியான பின்னர், அக்கட்சி நிர்வாகிகள் ஏற்கனவே தொகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மரக்கடையில் விஜய் தனது முதல் மக்கள் சந்திப்பை நடத்தியிருந்தார். திருச்சி கிழக்கு தொகுதியில் தற்போது தி.மு.க.வின் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.வாக உள்ளார். எனவே இங்கு விஜய் - தி.மு.க. இடையே நேரடி போட்டி உள்ளது.
ஏப்ரல் 2-ஆம் தேதி காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வரும் விஜய், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்த உடனேயே, அன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள த.வெ.க. தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் சார்பில் மனு அளித்துள்ளார். பிரச்சாரத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை கோரப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விஜய் மேல ஏன் CASE போட்டீங்க..? என்னதான் நடந்துச்சு... விளக்கம் கேட்ட தலைமை தேர்தல் அதிகாரி..!!
த.வெ.க. தனது முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது. விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவது கட்சியின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது. பெரம்பூரில் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ள அவர், திருச்சி கிழக்கிலும் அதே உத்வேகத்துடன் களம் காண உள்ளார். இந்த நிகழ்வு திருச்சி மாவட்டத்தில் அரசியல் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரு கரூர் துயரம் போதும்... விஜய் மீது ஏன் CASE போட்டீங்க..! கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா..!!