மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை விறுவிறு..!! 29 மாநகராட்சிகளையும் கைப்பற்ற போவது யார்?
மராட்டியத்தில் 29 மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மும்பை, தானே, புனே, நாக்பூர், நவி மும்பை உள்ளிட்ட இந்த மாநகராட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்தும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, ஜனவரிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, கடந்த மாதம் 15-ம் தேதி இந்த 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும், மாநில அரசியல் களத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை மாலை வரை நீடித்த இந்த பிரச்சாரம், அனல் பறக்கும் விவாதங்களுடன் முடிவடைந்தது.இத்தேர்தலில் மொத்தம் 2,869 கவுன்சிலர் பதவிகளுக்கு 15,391 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதையும் படிங்க: அனல் பறக்கும் திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு..!! கோலாகல கொண்டாட்டத்தில் வீரர்களும், காளைகளும்..!!
குறிப்பாக, மும்பை மாநகராட்சியில் மட்டும் 1,700 வேட்பாளர்கள் களமிறங்கினர். மாநிலம் முழுவதும் 3 கோடியே 48 லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். தேர்தலையொட்டி, மாநில தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. நகர்ப்புற தேர்தல் என்பதால், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் என பலரும் வாக்குச் சாவடிகளுக்கு வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
நேற்று காலை முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 5.30 மணிக்குப் பிறகு, வாக்குச் சாவடியில் இருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்டது. பின்னர் வந்தவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். வாக்குப்பதிவு முடிவில், மும்பை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் சராசரியாக 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வாக்குப்பதிவு முடிந்த உடன், இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மும்பையில் மட்டும் 23 மையங்களில் இந்தப் பணி நடைபெறுகிறது. மதியம் 1 மணி அளவில் வெளியாகும் ஆரம்ப முடிவுகளை வைத்து, எந்தக் கட்சி அல்லது கூட்டணி இந்த 29 மாநகராட்சிகளைக் கைப்பற்றும் என்பதை ஓரளவு கணிக்க முடியும்.
மாலைக்குள் முழுமையான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தல் முடிவுகள் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நோபல் பரிசு எனக்குத்தான்!! பூரித்துப்போன அதிபர் ட்ரம்ப்! நீண்ட நாள் கனவு நிறைவேறியது!