மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி பதவியேற்பு..!! ஜனாதிபதி முர்முவை சந்தித்து வாழ்த்து..!!
புது டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மேற்கு வங்காளத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என். ரவி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக ஆளுநராக பதவி வகித்த ஆர்.என். ரவி, தற்போது மேற்கு வங்காள மாநில ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார். இந்த மாற்றம் மத்திய அரசு மேற்கொண்ட நிர்வாக ரீதியிலான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் ஆர்.என். ரவி பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, கேரள மாநில ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாட்டின் கூடுதல் பொறுப்பாக ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதன்படி, அவர் சென்னையில் உள்ள ராஜ் பவனில் (லோக் பவன்) பதவியேற்று, தமிழகத்தின் அரசியல் சட்ட ரீதியான பொறுப்புகளை கவனித்து வருகிறார்.
மறுபுறம், மேற்கு வங்காளத்தில் முந்தைய ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, ஆர்.என். ரவி அம்மாநிலத்தின் 22வது ஆளுநராக நியமிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜோய் பால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பதவியேற்ற சில நாட்களில், ஆர்.என். ரவி ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக சந்தித்தார். ஜனாதிபதி மாளிகை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்பு ட்விட்டர்) கணக்கில் இந்த சந்திப்பின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பு, மேற்கு வங்காளத்தில் வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: மேற்குவங்க ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என் ரவி..!! பதவியேற்பு விழாவில் மம்தா பேனர்ஜி பங்கேற்பு..!!
தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, முதல் கட்டத்தில் 152 தொகுதிகளும், இரண்டாம் கட்டத்தில் 142 தொகுதிகளும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. இதனால், புதிய ஆளுநரின் பொறுப்பேற்பு மாநில அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆர்.என். ரவி, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியாகவும், முன்னாள் உளவுத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். நாகாலாந்து, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இவரது மாற்றம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநிலங்களிலும் வரும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பு நிகழ்ந்துள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும், ராஜ் பவனுக்கும் இடையே ஏற்கெனவே நிலவும் முரண்பாடுகள் மேலும் தீவிரமடையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிர்வாக மாற்றங்கள், மத்திய அரசின் முடிவின்படி பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டில் ராஜேந்திர அர்லேகர் கூடுதல் பொறுப்பை ஏற்றிருப்பதால், அம்மாநிலத்தில் ஆளுநர் மாளிகை செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறுவதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தை விட்டு பிரிவது வேதனை! ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!