×
 

கொல்லூர் மூகாம்பிகையிடம் விஜயின் வேண்டுதல் இதுவா?... பின்னணியில் இருக்கும் அதிரடி காரணம்...!

டெல்லி பயணத்திற்குப் பிறகு கொல்லூர் மூகாம்பிகை அம்மனை தரிசித்த முதலமைச்சர் விஜயின் பயணம் கவனம் ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஆன்மீகமும் அதிகாரமும் எப்போதும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தனது மூன்று நாள் டெல்லி பயணத்தை முடித்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய முதலமைச்சர் விஜய், நேரடியாக கர்நாடக மாநிலத்தின் மங்களூரு விமான நிலையம் சென்று, அங்கிருந்து உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டு சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள், குறிப்பாக தமிழக முதல்வர்கள், கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு ஆன்மீக மற்றும் ஜோதிட ரீதியாக பல காரணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு தேவையான அதிகாரம், செல்வாக்கு மற்றும் சரியான நேரத்தில் துல்லியமான முடிவுகளை எடுக்கும் திறனை இங்குள்ள தெய்வ அருள் வழங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கொல்லூர் மூகாம்பிகை அம்மன், மகாலட்சுமியின் செல்வ வளத்தையும், மகாசரஸ்வதியின் அறிவு மற்றும் ஞானத்தையும், மகாகாளியின் வீரத்தையும் சக்தியையும் ஒருங்கே வழங்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், கொடசாத்ரி மலையை ஒட்டிய சௌபர்ணிகா ஆற்றங்கரையில் அமைந்துள்ள இத்தலம், தென்னிந்தியாவின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இதையும் படிங்க: டெல்லி அரசியலிலும் சிக்சர் அடித்த விஜய்! அசந்து போன மோடி, அமித்ஷா! தரமான சம்பவம்!

பரசுராமர் உருவாக்கியதாகக் கூறப்படும் சப்த சேத்திரங்களில் ஒன்றாக இத்தலம் போற்றப்படுகிறது. இங்கு உள்ள ஜோதிர்லிங்கத்தில் காணப்படும் தங்க நிறக் கோடு, சூரிய ஒளி படும்போது லிங்கத்தை இரு பகுதிகளாகப் பிரித்து, வலது பகுதி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும், இடது பகுதி காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்தி வடிவங்களையும் குறிக்கிறது என்பது ஐதீகம்.

சிவமும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வர தத்துவத்தின் அடையாளமாகவும் இத்தலம் கருதப்படுகிறது. ஆதிசங்கரர் இங்கு தவம் செய்தபோது அன்னை மூகாம்பிகை நேரில் காட்சி அளித்ததாகவும், அவருடன் கேரளாவிற்கு வர சம்மதித்தபோது, திரும்பிப் பார்க்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் பின்தொடர்ந்ததாகவும், பின்னர் சங்கரர் திரும்பிப் பார்த்த இடத்திலேயே அம்மன் நிலைபெற்றதாகவும் ஆன்மிக வரலாறு கூறுகிறது.

அரசியல் ரீதியாகவும் இக்கோவிலில் நடைபெறும் சண்டி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், எதிர்ப்புகள், தடைகள் மற்றும் சதிகளை முறியடிக்கும் வல்லமை கொண்டதாக நம்பப்படுகிறது. மேலும், அதிகாரத்தையும் அதனை திறம்பட நிர்வகிக்கும் ஆற்றலையும் அளிக்கும் தலமாகவும் பக்தர்கள் கருதுகின்றனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இந்தக் கோவிலின் தீவிர பக்தராக விளங்கினார். 1984ஆம் ஆண்டு அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது நலம் கருதி இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டன. பின்னர் உடல்நலம் பெற்று திரும்பிய எம்.ஜி.ஆர்., தனது நன்றிக்கடனாக சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள தங்க வாளை காணிக்கையாக வழங்கியதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் தனது அரசியல் வாழ்க்கையின் சவாலான காலங்களில் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சண்டி ஹோமங்களை நடத்தியுள்ளார்.

திரையுலகைச் சேர்ந்த ரிஷப் ஷெட்டி, துனியா விஜய், சுருதி ஹரிஹரன், ஜூனியர் என்.டி.ஆர்., ஷில்பா ஷெட்டி, பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஷெட்டி, சூர்யா, ஜோதிகா, இயக்குநர் பிரசாந்த் நீல், பாடகர் கே.ஜே. யேசுதாஸ், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் இத்தலத்தின் பக்தர்களாக உள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜா வைரங்கள் பதிக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரீடத்தை அம்மனுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார்.

இக்கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். சிவராத்திரியை ஒட்டி நடைபெறும் ஆண்டு தேரோட்ட விழாவும் சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

முதலமைச்சர் விஜய், தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே திருச்செந்தூர் முருகன் கோவிலும், மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலும் சென்று வழிபாடு நடத்தியிருந்தார். பின்னர் தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக முன்னிறுத்திய விஜய், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், டெல்லி பயணத்திற்குப் பிறகு மேற்கொண்ட முதல் வெளிமாநிலப் பயணமாக கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டது அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share