நான் அதிமுகவிலேயே தான் இருக்கிறேன்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!
தவெக-வில் இணையப்போவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மறுத்துள்ளார்.
தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே நீடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக எழுந்த வதந்திகளுக்குத் தனது கைவிரல்களால் 'இரட்டை இலை' சின்னத்தைக் காட்டியபடி முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பதில் அளித்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ மற்றும் மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சிக் குழுத் தலைவர் சோலைராஜா ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக விளையாட்டு வீரர்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சோலைராஜா, தவெகவின் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை பேசியதற்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவாக சோலைராஜா பேசிய இந்த உரை, நாளிதழ்களில் விவாதப் பொருளாக மாறியது. குறிப்பாக, சோலைராஜா விரைவில் அதிமுகவிலிருந்து விலகி ஆளுங்கட்சியான தவெகவில் இணையப் போகிறார் என்று செய்திகள் பரவின. இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரான செல்லூர் ராஜூவிடம் சோலைராஜா நேரில் சென்று தனது நிலைப்பாடு குறித்த விளக்கத்தை அளித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!
செய்தியாளர்கள் சந்திப்பில் தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்த சோலைராஜா, விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் அமைச்சராக நீடிக்கலாம்; ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த பலரும் விளையாட்டுத் துறையில் இருந்திருக்கிறார்கள். எனவே, இன்பதுரையின் கருத்து தவறான கருத்துதான். இருந்தபோதிலும், நமது சொந்தக் கட்சியின் வழக்கறிஞர் இன்பதுரையை நான் பொதுவெளியில் 'கண்டிப்பதாகக்' கூறிய அந்த குறிப்பிட்ட வார்த்தைகளைத் தற்பொழுது முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேள்விகளை முன்வைத்தனர். அதற்குப் பதிலளித்த செல்லூர் ராஜூ, சோலைராஜாவின் விளக்கம் குறித்துத் தெரிவிப்பதற்காக மட்டும்தான் இந்தச் செய்தியாளர் சந்திப்பு என்று கூறினார். அப்போது செய்தியாளர்கள், "அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நீங்களும் தற்பொழுது தவெகவில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறதே, அது உண்மையா?" என்று கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்விக்கு வார்த்தைகளால் பதில் அளிக்காத செல்லூர் ராஜூ, புன்னகைத்தபடி, தனது கைவிரல்களால் அதிமுகவின் அடையாளமான 'இரட்டை இலை' சின்னத்தைக் காண்பித்தபடி செய்தியாளர் மேடையை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். தான் தவெகவில் இணையப் போவதாக வந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும், தான் அதிமுகவிலேயே நீடிப்பேன் என்றும் அவர் விரல் அசைவில் உணர்த்திச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: அன்று அணில், இன்று பீஸ் கேரியர்! தவெக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி!