×
 

முடிவுக்கு வந்தது மாணவர்கள் போராட்டம்..!! டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு..!!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் கடந்த 3 நாட்களாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான மாணவர் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து, டெல்லியில் மூடப்பட்டிருந்த அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களும் இன்று முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தலைமையில் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்று வந்த தொடர் போராட்டம், மத்திய அரசுடனான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து டெல்லி மெட்ரோ நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் அறிவிப்பு வெளியிட்டு, சேவைகள் இயல்புக்குத் திரும்பியதாக தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு இந்தியாவின் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வாகும். கடந்த காலங்களில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதரவு நாடு முழுவதும் பெருகியதால், பல்வேறு மாநிலங்களிலும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்தன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் கூடுதலாக நிறுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க: மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, கல்வீச்சு போன்ற சம்பவங்களால் பகுதி பதற்றமாக இருந்தது. கூட்டம் அதிகரிப்பதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மூன்று நாட்களாக 17 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. நான்காவது நாளாக இன்று காலை 7.30 மணி முதல் 18 நிலையங்கள் மூடப்பட்டன.

லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சௌக், படேல் சௌக், ராமகிருஷ்ண ஆசிரம மார்க், பாரகாம்பா சாலை, உச்ச நீதிமன்றம், சேவா தீர்த்தம், ஜன்பத், மண்டி ஹவுஸ், மத்திய செயலகம், ஐடிஓ, டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக், சிவாஜி ஸ்டேடியம், ஜண்டேவாலன், புதுடெல்லி ஆகியவை இதில் அடங்கும். ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரட்டேரியட் ஆகியவற்றில் இன்டர்சேஞ்ச் வசதி மட்டும் தொடர்ந்தது.

பேச்சுவார்த்தையில் கல்வி அமைச்சர் பதவி விலகல், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறுதல், பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பங்களுக்கு இழப்பீடு ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதாக கட்சி அறிவித்தது. இதையடுத்து நாடு தழுவிய போராட்டம் முடிவுக்கு வந்தது. மெட்ரோ சேவைகள் இயல்புநிலைக்குத் திரும்பியதால், பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகள் நீங்கியுள்ளன. இந்த நிகழ்வு, தேர்வு முறைகேடுகள் மீதான மாணவர் குரலை மீண்டும் உரக்க எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share