போரால் முட்டை ஏற்றுமதி பாதிப்பு..!! மீண்டும் தலைதூக்கும் மைனஸ் விலை..!! தலையில் அடித்துக்கொண்டு புலம்பும் நாமக்கல் பண்ணையாளர்கள்..!!
அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக கோழிப்பண்ணை தொழிலில் மீண்டும் மைனஸ் விலை தலைதூக்கி உள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைத் தொழில் தற்போது கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இங்கு சுமார் 1,200-க்கும் அதிகமான முட்டைக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 8 கோடிக்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த முட்டைகளில் பெரும் பகுதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக துபாய், குவைத், கத்தார், ஓமன், பக்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல் மூலம் நாளொன்றுக்கு 80 லட்சம் முட்டைகள் கன்டெய்னர்களில் அனுப்பப்படும். இந்த ஏற்றுமதி வருமானம் பண்ணையாளர்களுக்கு முக்கிய நம்பிக்கையாக இருந்து வந்தது.
எனினும், கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் இந்த நிலையை முழுமையாக மாற்றியுள்ளது. போர் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மற்றும் தூதரகங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், அங்குள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கப்பல் போக்குவரத்து தடைபட்டு, நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.200 உயர்வு!! டீசல் ரூ.336-க்கு விற்பனை! மக்கள் தலையில் இடியை இறக்கிய பாக்.,!
இதன் விளைவாக தினசரி 80 லட்சம் முட்டைகள் உள்நாட்டிலேயே தேங்கி வருகின்றன. வெளிநாட்டு சந்தை மூடியதால், உள்நாட்டு நுகர்வு தேவைக்கு அதிகமான முட்டைகள் சந்தையில் குவிந்துள்ளன. இந்த நிலையைப் பயன்படுத்தி வியாபாரிகள் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து சுமார் 30 காசுகள் வரை குறைத்து கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
பண்ணையாளர்கள் கூறுகையில், “கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஒரு முட்டைக்கு 450 காசுகளுக்குக் கீழ் விலை கிடைக்கிறது. உற்பத்தி செலவு ஒரு முட்டைக்கு 520 காசுகளாக உள்ளது. எனவே ஒவ்வொரு முட்டைக்கும் சராசரியாக ஒரு ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் தினசரி சுமார் 6 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த 24 நாட்களில் மட்டும் மொத்த இழப்பு 144 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது” என்று வேதனை தெரிவித்தனர்.
மேலும், கிறிஸ்தவர்களின் தவக்காலம் மற்றும் ரம்ஜான் நோன்புக்காலம் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை நுகர்வு கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் ஏற்றுமதிக்காக உள்ள முட்டைகளை உள்நாட்டிலும் விற்க முடியாமல் தவிக்கிறார்கள். வியாபாரிகள் விலையைக் குறைத்து விற்பனையை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நெருக்கடி நீடித்தால் கோழிப்பண்ணைத் தொழில் மீண்டும் ‘மைனஸ்’ விலை சுழற்சிக்குள் சிக்கும் அபாயம் உள்ளது. பண்ணையாளர்கள் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, போர் பாதிப்பிலிருந்து கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்..! புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி... திருமாவளவன் முக்கிய அறிவிப்பு..!!