மேற்காசிய மோதல் மேலும் தீவிரமடையலாம்?! போர் எப்போ முடியும்?! பெட்ரோலியம் அமைச்சர் தகவல்!
மேற்காசிய போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை நான் யூகிக்க முடியாது என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
மேற்காசிய பிராந்தியத்தில் நீடித்து வரும் பதற்றம் எவ்வளவு காலம் தொடரும் என்பதை யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், உலகளாவிய நெருக்கடிகளை கையாள்வதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை அவர் பாராட்டியுள்ளார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய ஹர்தீப் சிங் பூரி, கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். உலகின் பல்வேறு தலைவர்களின் செயல்பாடுகளை பார்த்திருந்தாலும், பிரதமர் மோடி போன்ற தலைமையை இதுவரை கண்டதில்லை என்று அவர் கூறினார். வளர்ச்சி மற்றும் நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் பிரதமரின் பார்வை தனித்துவமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேற்காசிய போர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய சூழ்நிலையில் ஒரு மத்திய அமைச்சராக இருப்பதால் போரின் கால அளவு குறித்து யூகிப்பது பொருத்தமல்ல என்றார். இருப்பினும், உலகளாவிய நெருக்கடிகள் ஏற்பட்டபோதெல்லாம் இந்தியா திறம்பட செயல்பட்ட அனுபவங்களை நினைவுகூர்ந்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.82க்கு விற்பனை! E- 85!! 85% எத்தனால் கலப்பால் குறைந்தது விலை!
குறிப்பாக 2022ஆம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியபோது, உக்ரைனில் சிக்கியிருந்த இந்திய மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு வருவோம் என்று உறுதியளித்த உலகின் முதல் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என அவர் தெரிவித்தார். அந்த நடவடிக்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், உலகளவில் அதிகளவு கச்சா எண்ணெய் போக்குவரத்து அந்த வழியாக நடைபெற்று வந்ததாக குறிப்பிட்டார். இந்தியாவின் எல்பிஜி விநியோகத்திலும் ஒரு பகுதி அந்த கடல் பாதையை சார்ந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய மோதல் எதிர்காலத்தில் சமாதான ஒப்பந்தமாக மாறலாம் என்றும், அதே நேரத்தில் மேலும் தீவிரமடையும் வாய்ப்பும் இருப்பதாக பல்வேறு கருத்துகள் நிலவுவதாக அவர் கூறினார். இருப்பினும், எந்த சூழ்நிலையிலும் இந்தியாவின் நலன்களை பாதுகாக்கும் திறன் மத்திய அரசுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு செயல்படும் பிரதமர் மோடியின் நிர்வாக பாணியை எதிர்க்கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், வளர்ச்சி அரசியலே மக்கள் ஆதரவை பெற்றுத் தருகிறது என்றும் ஹர்தீப் சிங் பூரி தனது பேட்டியில் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் முடிவு! ஒருநாள் கூட ஓய்வு இல்லை! நேருவின் சாதனையை முறியடித்தார் மோடி!