செல்வப்பெருந்தகை சீட்டுக்கு வேட்டு!! தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டி!
'தேர்தல் முடிந்ததும், தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார்' என, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான்கு பேர் இடையே தீவிர போட்டி உருவாகியுள்ளது. சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து கட்சியில் முக்கிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய தலைவர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் தெரிவிக்கையில், “தேர்தல் முடிவுகள் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளர் தேர்வில் கார்கே ஆதரவாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதும், பணம் விளையாடியதாக எழுந்த புகார்களும் தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது” என்றனர்.
தற்போது தலைவர் பதவிக்கு அதிகாரப்பூர்வமாக போட்டியிடும் நபர்களாக அகில இந்திய காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, டாக்டர் செல்லகுமார், எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: 180 சீட்டு ஜெயிச்சிருக்கணும்! தோத்ததே இவரால தான்! செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி!
எம்.எல்.ஏ., எம்.பி. பதவியில் உள்ளவர்களுக்கு தலைவர் பதவி வழங்கக்கூடாது என மேலிடம் முடிவு எடுத்தால், பிரவீன் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. அவர் முதல்வர் விஜய் மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுவதற்கான முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன. தமிழக காங்கிரஸின் ஐந்து எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர் பதவி கோரி டெல்லி சென்றுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதன் மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், இதுவரை பதவியில் இருந்து விலகவில்லை. இதற்கிடையே, மத்திய அரசின் நீட் தேர்வு மற்றும் சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று சென்னை தண்டையார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழக காங்கிரஸில் தலைவர் பதவி மாற்றம் மற்றும் அமைச்சர் பதவி வாய்ப்பு ஆகியவை கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான முடிவுகளாக பார்க்கப்படுகின்றன. ராகுல் காந்தி விருப்பத்துக்கு ஏற்ப புதிய முகம் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இதையும் படிங்க: #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!