தேர்தல் தோல்விக்கு தலைமை பொறுப்பல்ல! குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி!
தேர்தல் தோல்விக்குத் தலைமை பொறுப்பல்ல என்றும், எதிர்காலத்தில் அதிமுக ஆட்சி அமையும் என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி உறுதியாக அமையும் என்று அதிமுக தலைமை கொறடாவும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கட்சியின் உள்கட்சி விவகாரங்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் குற்றச்சாட்டுகள் குறித்துச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்தார்.
சமீபத்தில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அளித்த பேட்டிகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடி பழனிசாமி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அப்பட்டமான பொய் எனக் கூறினார். கட்சியில் உள்ள குறுநில மன்னர்கள் மீது எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.
திமுகவுடன் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி எந்த நேரத்திலும் கூறவில்லை. திமுகவை எதிர்த்துத் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. திமுக ஒரு தீய சக்தி என்பதில் நாங்கள் இப்போதும் உறுதியாக இருக்கிறோம்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் மிகப்பெரிய அடி விழும்! 7 தொகுதிகளில் தோல்வி உறுதி! முதல்வர் விஜய் டேபிளுக்கு சென்ற உளவுத்துறை ரிப்போர்ட்!
எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவுகளை எடுக்கும் போது தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவில்லை என்று சொல்வது முற்றிலும் தவறானது. கடந்த தேர்தலில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோர் பரிந்துரைத்தவர்களே அந்தந்த மாவட்டங்களில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அப்படிப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தோற்றதற்கு அந்தந்த மாவட்டச் செயலாளர்களே முழுப் பொறுப்பாவார்கள்; இதற்குத் தலைமை பொறுப்பேற்க முடியாது.
அதிமுகவில் தற்போது காலியாக உள்ள கட்சிப் பொறுப்புகளுக்கு, விரைவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டுத் தகுதியான நபர்கள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க: திமுக தலைமை மீது அதிருப்தியா? அதிமுக பக்கம் நகர்கிறாரா தோப்பு வெங்கடாசலம்?