ரூ.5,000 அறிவிப்பு..!! இபிஎஸ் வாயை அடைத்த முதல்வர் ஸ்டாலின்..!! அமைச்சர் ரகுபதி சரவெடி..!!
ரூ.5 ஆயிரம் அறிவிப்பின் மூலம் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வாயை அடைத்துள்ளார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். இன்று (பிப்ரவரி 13, 2026) காலை, தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மூன்று மாத உரிமைத் தொகையாக ரூ.3,000 (மாதம் ரூ.1,000 வீதம்) மற்றும் கோடைக்கால சிறப்பு உதவித்தொகையாக ரூ.2,000 என இரு பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கோடை வெயிலின் தாக்கத்தில் குடும்பச் செலவுகளை சமாளிக்கும் பெண்களுக்கு கூடுதல் நிதி உதவி கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி ஒரு காபி பேஸ்ட் எக்ஸ்பர்ட்! எடப்பாடியின் ரூ.2000 அறிவிப்பை வறுத்தெடுத்த அமைச்சர் ரகுபதி!!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் 2023-இல் தொடங்கப்பட்டது முதல், மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் விரிவாக்கத்தால் தற்போது 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் ஸ்டாலின் எப்போதும் தமிழ்நாட்டு மக்களுக்கு சொன்னதைச் செய்வதோடு, சொல்லாததையும் செய்து இன்ப அதிர்ச்சி அளிப்பவர் என்று புகழ்ந்தார்.
இன்றைய ரூ.5,000 வரவு வைப்பு அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எனக் குறிப்பிட்டார். கடந்த மாதம் பொங்கல் பரிசுடன் ரூ.4,000 கிடைத்த நிலையில், இம்மாதம் கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ.2,000 உரிமைத் தொகை அளிப்பதாகக் கூறி வரும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை அவரது கருத்துகளை மறுப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதைச் செய்பவர் என்றும், எடப்பாடி பழனிசாமி சொல்வதைச் செய்யாதவர் என்றும் ஒப்பிட்டார். மேலும், பாஜகவும் அதிமுகவும் இத்திட்டத்தை முடக்க சதி செய்ததாகக் குற்றம்சாட்டினார் அமைச்சர் ரகுபதி. தேர்தலுக்குப் பிறகு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற முயல்வார்கள் என அஞ்சி, முன்கூட்டியே தொகையை வழங்கியதாக விளக்கினார்.
இதனால், பெண்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி தடையின்றி கிடைத்துள்ளது. "ஆயிரம் கைகள் மறைத்தாலும் சூரியனை மறைக்க முடியாது" என்பதை உதாரணமாகக் காட்டி, மக்களின் துன்பங்களை நீக்கும் உதயசூரியன் போன்றவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்று புகழ்ந்தார். திராவிட மாடல் 2.0 அரசு மீண்டும் அமையும் என நம்பிக்கை தெரிவித்த அமைச்சர், பாஜக ஆளும் மாநிலங்களிலும் இதுபோன்ற உதவித் தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு இத்திட்டத்தை விமர்சிக்க தகுதி இல்லை என்றும் வாதிட்டார்.
இந்த நடவடிக்கை தேர்தலுக்கு முன்பு பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்துவதாகவும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: முதலமைச்சர் தலைமையில் தீவிர ஆலோசனை!