தப்பை தட்டிக் கேட்டால் கொலை தான் பதிலா? சென்னை இளைஞர் கொலை! இபிஎஸ் கண்டனம்!
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தண்டையார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, அங்கு செயல்பட்டு வந்த கஞ்சா கும்பலை எதிர்த்து கேள்வி எழுப்பியதால், அந்தக் கும்பல் அவரை அம்மிக்கல், பீர் பாட்டில்கள் மற்றும் சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளது.
இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து தண்டையார்பேட்டை பகுதி மக்கள் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தண்டையார்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் நீண்ட நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் அசௌகரியம் ஏற்பட்டது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த கொலைச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்தால் கொலைதான் பதில் என்பதா இந்த ஆட்சியின் மாற்றம்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் கையில் எடுத்த 2 துறைகள்! 6 மாதம் டார்கெட்! அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் தவெக அரசு!
மேலும், “திருச்சியில் பேசிய முதல்வர் தன் மீது வீண் பழி சுமத்துவதாக ஆதங்கப்படுகிறார். அதிகாரிகளை நியமித்தால் மட்டும் போதுமா? மாற்றம் ஆட்சியாளரிடம் இருந்து வர வேண்டும். காவல்துறையை கையில் வைத்திருந்தும் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை” என்று விமர்சித்தார்.
போதைப்பொருளை ஒழிக்க முடியாது என மறைமுகமாக ஒப்புக்கொண்டதாகவும், பெண்கள் பாதுகாப்புக்கு சிங்கப்பெண் அதிரடிப்படையை அடுத்த வாரம் தொடங்குவதாக அறிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டி, “கடந்த வாரம் தயாராக இருந்ததை ஏன் ரத்து செய்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடியில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட சமீபத்திய சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, “ஒரு கட்சித் தலைவராக தன் கட்சியினரை அடக்க முடியாதவர் எப்படி மாநிலத்தை நிர்வகிப்பார்?” என்று வினவினார்.
“ஆட்சி நடத்தும் முறையை கற்றுக்கொள்ளும் வரை மக்கள் உயிரிழந்து கொண்டே இருக்க வேண்டுமா?” என்று கேட்ட எடப்பாடி, முதல்வர் விஜய் சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல் பங்கை சுறையாடிய போதை ஆசாமிகள்! எரிபொருள் நிரப்பும் இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!