தள்ளாத 99 வயதிலும் ஜனநாயக கடமை! 1946ல் ஓட்டு போடுறேன்! முன்னாள் அமைச்சருக்கு மோடி பாராட்டு!
தமிழக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் 99 வயதான மூத்த அரசியல் தலைவரும், தமிழக முன்னாள் அமைச்சருமான டாக்டர் எச்.வி. ஹண்டே நேற்று ஓட்டளித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். வயது முதிர்ச்சியை மீறி ஜனநாயகக் கடமையை ஆற்றிய அவரது செயல் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் தன் 99வது பிறந்தநாளை கொண்டாடிய ஹண்டே, எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராகப் பணியாற்றியவர். தற்போது பா.ஜ.க.வில் உள்ள அவர், 1967 மற்றும் 1971 சட்டசபைத் தேர்தல்களில் சென்னை பூங்கா நகர் தொகுதியில் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர். 1980ல் அண்ணா நகர் தொகுதியில் மு.கருணாநிதியிடம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த வரலாறும் அவருக்கு உண்டு.
நேற்று ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ஒரு ஓட்டுச்சாவடியில் ஹண்டே ஓட்டளித்தார். இதுகுறித்து தன் சமூகவலைதளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “99 வயதில் ஓட்டளித்ததை பெருமையாக உணர்கிறேன். ஆங்கிலேயர் ஆட்சியில் 1946ல் நடைபெற்ற சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக ஓட்டளித்தேன். அப்போது நான் மருத்துவக் கல்லூரி மாணவன். அன்று முதல் இன்று வரை அனைத்து தேர்தல்களிலும் ஓட்டளித்து வருகிறேன். ஓட்டளிப்பது வெறும் உரிமை மட்டுமல்ல, எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பும் ஆகும். ஒவ்வொருவரின் ஓட்டும் முக்கியமானது. இதை அனைவரும் உணர வேண்டும்” என்று உணர்ச்சிபூர்வமாக எழுதினார்.
இதையும் படிங்க: வருமான வரி சோதனை நடந்ததா? இல்லையா? இன்று ஆதாரங்களை வெளியிடுகிறார் செல்வப்பெருந்தகை!
ஹண்டேயின் இந்த பதிவைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, தன் ‘எக்ஸ்’ (ட்விட்டர்) தளத்தில் அதைப் பகிர்ந்து பாராட்டு தெரிவித்தார். “இது மிக முக்கியமான செய்தி. இளைஞர்கள் மிக அதிக எண்ணிக்கையில் ஓட்டளித்து நம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார். 99 வயதிலும் ஓட்டுச் சாவடிக்கு நடந்து சென்று ஓட்டளித்த ஹண்டேயின் அர்ப்பணிப்பு, இளைஞர்களுக்கு பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது.
தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட ஹண்டே, பல தலைமுறைகளைத் தாண்டி ஜனநாயகத்தில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அவரது செயல், வயதானவர்களும் இளைஞர்களும் ஒரே அளவில் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. தேர்தல் நாளான நேற்று சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பலரின் மனதில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
99 வயதிலும் உற்சாகத்துடன் ஓட்டளித்த ஹண்டேயின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அவரது செயல் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பாராட்டுக்குரியதாக மாறியுள்ளது. ஜனநாயகத்தின் உண்மையான சக்தி ஒவ்வொரு ஓட்டிலும் இருப்பதை ஹண்டேயின் வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: தங்க காசு, வெள்ளிக்காசு விநியோகம்! கரூர் தொகுதியில் தேர்தல் நாளில் நடந்த கூத்து!