அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வலை வீசி பிடிக்கும் எடப்பாடி! தக்க வைக்க போராடும் வேலுமணி, சண்முகம் தரப்பு!
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தீவிரம் காட்டி வருவதால், அவர்களை தக்கவைக்க, வேலுமணி, சண்முகம் அணியினர் போராடி வருகின்றனர்.
சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள வேலுமணி - சண்முகம் அணி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, வேலுமணி தரப்பில் 25 எம்.எல்.ஏ.க்களும், பழனிசாமி தரப்பில் 22 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். மகாராஷ்டிரா சிவசேனா பிளவில் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களுடன் கட்சியைக் கைப்பற்றியதைப் போல, வேலுமணி தரப்பு தங்களுக்குச் சாதகமான நிலையைப் பயன்படுத்த முயல்வதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்க பழனிசாமி தரப்பு மூன்று எம்.எல்.ஏ.க்களையாவது தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறது.
மாவட்ட செயலர் பதவியை இழந்த எம்.எல்.ஏ.க்களிடம் பழனிசாமி, “என் பக்கம் வந்தால் மீண்டும் பொறுப்பு கொடுப்பேன்” என வாக்குறுதி அளித்து பேச்சு நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வேலுமணி அணியினர் பெரும் நெருக்கடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் மா.செ கூட்டத்தை கூட்டும் எடப்பாடி பழனிசாமி! எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பை முந்திக்கொள்ள திட்டம்!
இந்நிலையில், வேலுமணி - சண்முகம் தரப்பு த.வெ.க. அரசிடம் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. “வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் எங்களது குழுவை சட்டசபையில் அதிகாரப்பூர்வ அ.தி.மு.க. அணியாக அங்கீகரிக்க வேண்டும். இது எங்களுக்கு ஓரிரு மாத காலம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தக்கவைக்க உதவும்” என அவர்கள் கேட்டுள்ளனர்.
“அமைச்சரவையில் இடம் தரவில்லை என்றால் இந்த உதவியாவது செய்யுங்கள்” என வேலுமணி அணி த.வெ.க.விடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த உள் பூசல் அ.தி.மு.க.வின் எதிர்காலத்தையே பாதிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: விரைவில் “அம்மா ” நியூஸ் சேனல்!! கட்சியை மீட்க எடப்பாடி பழனிசாமி புது திட்டம்!