தவெக டூ மீண்டும் அதிமுக..!! எஸ்.பி.வேலுமணி சொன்ன பரபரப்பு விஷயம்..!! அரசியல் களத்தில் பூகம்பம்..!!
தவெகவிற்கு சென்றவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வர தயாராக உள்ளனர் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் குறித்து தனிப்பட்ட நட்பு நினைவுகளைப் பகிர்ந்ததோடு, அவரது அரசியல் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.
வேலுமணி தனது உரையில், “விஜய் எனக்கு மிக நெருங்கிய நண்பர். ஒரு காலகட்டத்தில் அவரது ஒரு திரைப்படம் வெளியீட்டில் பெரும் சிக்கல் ஏற்பட்டபோது, அவர் எனது வீட்டிலேயே தங்கியிருந்தார். நானே எனது காரில் அவரை அழைத்துச் சென்று, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் சந்திக்க வைத்தேன். அவரிடம் பேசி, படத்தை வெளியிட தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தேன். நட்பு ஒரு பக்கம், அரசியல் வேறு பக்கம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
அதேநேரம், விஜய்யின் தலைமைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கிய வேலுமணி, கரூரில் 41 பேர் உயிரிழந்த கொடூர சம்பவத்தை சுட்டிக்காட்டினார். “அந்த துயர சம்பவம் நடந்தபோது, விஜய் அங்கு சென்று மக்களை சந்திக்காமல், உடனடியாக சென்னைக்கு சென்றுவிட்டார். மீண்டும் திரும்பி வரவில்லை. ஒரு உண்மையான தலைவனிடம் மக்களின் உயிர்களை காப்பாற்றும் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். அது தான் உண்மையான தலைமைத்துவத்தின் அடையாளம்” என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிடாத கட்சிகளுக்கு எதற்கு முன்னுரிமை? தவெக மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்றம் கேள்வி!
மேலும், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தவர்கள் பலர் இப்போது மீண்டும் அதிமுகவில் சேர ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார். “அவர்கள் உரிய பதவிகள் வழங்கினால் வந்துவிடுவோம் என தெரிவிக்கின்றனர். அதிமுகவில் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் வேறு எங்கும் கிடைக்காது” என்று அவர் வலியுறுத்தினார்.
திமுக ஆட்சியின் கடந்த ஐந்தாண்டு கால வரி கொள்கையையும் வேலுமணி கேள்வி எழுப்பினார். “ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை வரி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் வெறும் 3 ஆயிரம் அல்லது 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே திருப்பிக் கொடுக்கப்பட்டால் அது போதுமானதா? மக்களின் சிரமங்களை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்” என்று கேட்டார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் மீதான தனிப்பட்ட நட்பு மற்றும் அரசியல் விமர்சனத்தை ஒரே மேடையில் இணைத்து பேசிய வேலுமணியின் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவும் தவெகவும் இடையே ஏற்படும் மோதல்கள் தீவிரமடைவதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஊடக விவாதங்களில் பங்கேற்க வேண்டாம்! தவெகவினருக்கு புஸ்ஸி ஆனந்த் அதிரடி உத்தரவு!