வாயை விட்டு வசமாய் மாட்டிய உதயநிதி ஸ்டாலின்! என் குடும்பத்தையே இழிவு படுத்திட்டாரு! கொதிக்கும் வேட்பாளர்!
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் மனு அளித்துள்ளார்.
லீமா ரோஸ் தனது புகார் மனுவில், “கடந்த 11-ம் தேதி லால்குடியில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், எனது தனிப்பட்ட அரசியல் அடையாளத்தை இழிவான வார்த்தைகளால் தாக்கியுள்ளார். வாக்காளர்களின் மனங்களில் எனக்கு எதிரான எண்ணத்தை உருவாக்குவதே அவரது நோக்கம்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “நானும் என் குடும்பத்தினரும் மறைமுக நோக்கங்களுக்காக பல அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதாக உதயநிதி பேசியுள்ளார். அதோடு, நான் வெற்றி பெற்றால் தமிழகத்தில் மீண்டும் லாட்டரி தொழில் கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார். இது எனக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல், தமிழகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” என்றும் லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்! சொத்துக்கணக்கில் பிழை?! வருமான வரித்துறைக்கு கோர்ட் உத்தரவு!
இதுகுறித்து லீமா ரோஸ் விளக்குகையில், “என் கணவர் மார்ட்டின் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இது கேரளா, சிக்கிம், கோவா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் சட்டப்பூர்வமாக நடைபெறும் தொழில். அந்தந்த மாநிலங்களின் சட்ட விதிகளை முழுமையாகப் பின்பற்றியே இந்த வியாபாரம் நடைபெறுகிறது” என்றார்.
எனவே, தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் எதிராக அவதூறு பரப்பும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தடை விதிக்க வேண்டும் என்று லீமா ரோஸ் தனது புகார் மனுவில் கோரியுள்ளார்.
லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லீமா ரோஸின் இந்த புகார், தேர்தல் பிரசாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் இந்த புகாரைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமா என்பது அரசியல் வட்டாரங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக திமுக தலைவர்கள் பேசும் விதம் குறித்து அதிமுக தரப்பு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. லீமா ரோஸின் புகார் இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் சொத்துக்கணக்கில் தில்லுமுல்லு! வருமான வரித்துறை விசாரிக்க வேணும்! கோர்ட்டில் மனு!