×
 

தேர்தல் அப்போ கொடுத்த பணம்?! எப்போ திரும்ப வரும்?! அதிமுக தலைமையிடம் வேட்பாளர்கள் போர்க்கொடி!

தேர்தலின்போது, அ.தி.மு.க., தலைமையிடம் கொடுத்த நிதி திருப்பி தரப்படாததால், அக்கட்சி வேட்பாளர்கள் கண் கலங்கி நிற்கும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பும் வகையில், தேர்தல் செலவுக்காக கட்சி தலைமையிடம் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிதி இதுவரை திருப்பி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அ.தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல முன்னாள் வேட்பாளர்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை தவிர்த்து, 169 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட்டது. அப்போது வேட்பாளர் தேர்வு நடைமுறையின் போது, தேர்தல் செலவுகளை சமாளிக்கும் திறன் உள்ளவர்களா என்பதை உறுதி செய்வதற்காக, தொகுதியில் போட்டியிட விரும்பியவர்களிடம் முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கட்சி நிர்வாகிகள் தரப்பில் வெளியாகியுள்ள தகவலின்படி, பல மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சீட் விரும்பிகள் ரூ.8 கோடி முதல் ரூ.15 கோடி வரை வழங்கியதாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் இந்த தொகை செலவுக்காக திருப்பி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: இடைத்தேர்தலுக்கு யாரை நிறுத்துவது? தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! கையை பிசையும் இபிஎஸ்!

ஆனால் தேர்தல் காலத்தில் பலருக்கு முழு தொகை கிடைக்கவில்லை என்றும், சிலருக்கு பாதி தொகை மட்டுமே வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பின்னர் தொகை வழங்கப்படும் என கூறப்பட்டதால், பல வேட்பாளர்கள் கடன் வாங்கியும், சொத்துகளை அடகு வைத்தும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவில் கணிசமான எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் தோல்வியடைந்த நிலையில், தற்போது அவர்கள் கடுமையான நிதிச் சுமையை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. சிலருக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.8 கோடி வரை நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது தெளிவான பதில் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அவர்கள் நேரடியாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு கட்சியின் எதிர்காலம் குறித்து விவாதங்கள் நீடித்து வரும் நிலையில், இந்த நிதி விவகாரமும் அ.தி.மு.க.வுக்கு புதிய சவாலாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அதிமுக பெயரைச் சொல்லி பண வசூல்!! எச்சரிக்கையா இருந்துக்குங்க! எடப்பாடி பழனிசாமி வார்னிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share