திமுக எதிர்ப்பில் கோட்டை விட்ட இபிஎஸ்! அதிமுகவில் புகைச்சல்! போர்க்கொடி தூக்கும் மாவட்ட செயலாளர்கள்!!
‘செய்ய வேண்டியதை செய்யாமல் எங்களை விரட்டி என்ன பிரயோஜனம்?’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் புலம்புவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் உள் பதற்றம் அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி காரசாரமாக பேசினார்.
"விடியா ஆட்சி; உங்கள் வீட்டு பில்லே சாட்சி" என்ற பிரசாரத்தை தீவிரமாக செய்யுமாறு வலியுறுத்தினார். கூட்டணி அமைத்து கொடுத்துவிட்டேன், இனி மனஸ்தாபங்களை விலக்கி இணைந்து பணியாற்றுங்கள் என்றும் கூறினார்.
மேலும், தேர்தல் பணிகளில் கூட்டணி கட்சியினரை இணைத்துக்கொள்ளுங்கள், பூத் கமிட்டிகளை அமைக்க தாமதிக்காதீர்கள், தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன என்றும் எச்சரித்தார். திமுக மீது மக்கள் அதிருப்தி உள்ளது, அதை சாதகமாக மாற்ற தைரியமாக களத்தில் நில்லுங்கள், தேவையான உதவிகளை தலைமை செய்யும் என்றும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: பாஜக பாணியை கையில் எடுக்கும் எடப்பாடி! சீனியர் நிர்வாகிகளுக்கு ஆப்பு! அடுத்தடுத்து அதிமுகவில் புது ரூல்ஸ்!
ஆனால் இந்தப் பேச்சு மாவட்ட செயலாளர்களை எரிச்சலடையச் செய்தது. கூட்டம் முடிந்த பிறகு சில மாவட்ட செயலாளர்கள் ஊடகங்களிடம் புலம்பினர். "திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம், சொத்து வரி போன்றவற்றை வீடு வீடாக சென்று ஆதாரத்துடன் சொல்வதே 'விடியா ஆட்சி' பிரசாரத்தின் நோக்கம். ஒரு வீட்டுக்கு பில் எடுத்துக்காட்ட 20 நிமிடம் ஆகிறது. தேர்தல் நேரத்தில் இப்படி செய்ய முடியாது" என்று கூறினர்.
தலைமையிடம் இருந்து தேர்தல் பணிகளுக்கு ஒத்துழைப்பு இல்லை என்றும் அவர்கள் ஆதங்கப்பட்டனர். உதாரணமாக, வடசென்னை மாவட்ட செயலாளர் ராஜேஷ், ஆர்கே நகரில் திமுக அரசு கட்டிய பூங்காவின் தரமின்மை குறித்து ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டார். அதற்கு அரசு சொத்து சேதப்படுத்தியதாக வழக்கு போடப்பட்டது. இதை கண்டித்து பழனிசாமி கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை, போராட்ட அறிவிப்பும் இல்லை என்று விமர்சித்தனர்.
"மாவட்ட செயலாளருக்கே இந்த நிலைமை என்றால், இனி வழக்கு பயத்தால் திமுகவை யாரும் எதிர்க்க மாட்டார்கள். எதையும் செய்யாமல் 'இணைந்து பணியாற்றுங்கள், மக்களைத் தேடி செல்லுங்கள்' என்று சொன்னால் போதுமா?" என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். தலைமையிடத்தில் பல பிரச்னைகள் உள்ளன, அவற்றை சொல்லி மாளாது என்றும் ஆதங்கம் தெரிவித்தனர்.
இந்த அதிருப்தி அதிமுகவின் தேர்தல் தயாரிப்புகளுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கூட்டணி வலுப்படுத்தப்பட்ட நிலையில், அமைப்பு ரீதியான ஒற்றுமை இல்லாதது கட்சியை பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளது. தலைமை இதை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்தல் களத்தில் பின்னடைவு ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: என்.டி.ஏ கூட்டணிக்கு என்னை யாரும் கூப்புடல!! அப்போ தவெக தானா? ஓபிஎஸ் பேச்சில் சூசகம்!!