விரைவில் அதிமுக அணிகளை இணைக்க தூது! சமாதான பேச்சில் தீவிரம் காட்டும் இபிஎஸ்!
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து, ராஜினாமா செய்து வரும் நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி மற்றும் அதிருப்தி அணியான வேலுமணி தரப்பு இடையே, சமாதானப் பேச்சு நடந்து வருகிறது.
அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து அணி மாறி வரும் நிலையில், கட்சிக்குள் புதிய அரசியல் பரபரப்பு உருவாகியுள்ளது. பொதுச் செயலர் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையிலான அதிருப்தி அணிக்குள் தற்போது சமாதான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த போதிலும், வேலுமணி அணியினருக்கு அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஜெயகுமார் உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.வில் இணைந்தனர். இந்த நடவடிக்கை, வேலுமணி அணிக்குள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், ஆற்காடு சுகுமார், சங்கரன்கோவில் திலிபன் ஜெய்சங்கர், பண்ருட்டி மோகன், காங்கேயம் நடராஜன், அந்தியூர் ஹரிபாஸ்கர், ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட ஆறு எம்.எல்.ஏ.க்கள் வேலுமணி அணியிலிருந்து விலகி பழனிசாமி தரப்பில் இணைந்தனர். இதனால் சட்டசபையில் தனிக்குழுவாக செயல்பட தேவையான எண் பலம் குறைந்ததால், வேலுமணி தரப்பு நெருக்கடியில் சிக்கியது.
இதையும் படிங்க: திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!
இந்த சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் விஸ்வநாதன் மற்றும் தங்கமணி உள்ளிட்டோர், நேற்று மாலை பழனிசாமி இல்லத்திற்கு சென்று சமாதான பேச்சு நடத்தினர். தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட கட்சி பொறுப்புகளை மீண்டும் வழங்கினால், பழனிசாமி தலைமையை ஏற்க தயார் என அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்த பழனிசாமி, “மாவட்ட செயலாளர் பதவிகளை உடனடியாக மாற்ற முடியாது. ஆனால், அமைப்பு செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வழங்க தயாராக இருக்கிறேன். மாவட்டங்களை பிரித்து புதிய பொறுப்புகளும் வழங்கப்படும்” என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கட்சியின் தற்போதைய நிலைக்கு யார் காரணம் என்ற விவகாரத்தில் இருவரும் நேருக்கு நேர் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் மூத்த நிர்வாகிகள் தலையிட்டதன் பின்னரே சமாதான பேச்சு தொடங்கியதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!