×
 

இரண்டாக உடைந்தது அதிமுக! சட்டசபையில் வெட்ட வெளிச்சம்!! எடப்பாடி பழனிசாமி vs சி.வி.சண்முகம்!

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை தற்போது கட்சிக்குள் வலுப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

சென்னை: 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த அதிமுக, இன்று சட்டப்பேரவையில் பகிரங்கமாக உடைந்தது. 17வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏக்கள் இரு தரப்பினராகத் தனித்தனியே வருகை தந்த சம்பவம் கட்சியின் பிளவை உறுதி செய்துள்ளது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், திமுக 59 இடங்களையும், அதிமுக வெறும் 47 இடங்களையும் மட்டுமே கைப்பற்றியது. பல தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதோடு, டெபாசிட் இழந்த அதிர்ச்சியும் அதிமுக தொண்டர்களை கடுமையாக பாதித்துள்ளது.

தொடர் தோல்விகளின் தொடர்ச்சியாக இந்த முடிவு அமைந்துள்ளது. நாடாளுமன்றம், உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்கள் என கடந்த சில ஆண்டுகளில் 11 தேர்தல்களில் தொடர்ச்சியான தோல்வியைச் சந்தித்த அதிமுக, இந்த முறையும் கடுமையான பின்னடைவை எதிர்கொண்டது. இதனால் கட்சியின் எதிர்காலம் குறித்து நிர்வாகிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த இபிஎஸ்!! எடப்பாடி பழனிசாமியின் அனல் பறக்கும் பிரசார யுக்தி!

குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட கிடைக்காத நிலை ஏற்பட்டதால் எடப்பாடி பழனிசாமி மீது தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. அவர் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுப்பெற்று வருகிறது.

மற்றொரு பக்கம், தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளித்து ஆட்சியில் பங்கேற்கலாம் என்ற யோசனையும் அதிமுகவுக்குள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருப்பதால் கட்சித் தாவல் தடைச் சட்டத்துக்கு உட்படாமல் செயல்பட முடியும் என்ற நம்பிக்கையில் சண்முகம் அணி செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இன்று சட்டசபையில் முதல்வர் விஜய் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர். அதிமுகவைப் பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமி தலைமையில் கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலர் முதலில் வருகை தந்தனர். சிறிது நேரம் கழித்து சி.வி.சண்முகம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தனியாக வந்து அமர்ந்தனர். வழக்கமாக எடப்பாடி வரும்போது அவருடன் அனைவரும் வரும் நிலையில், இந்த இரு குழு வருகை அதிமுகவில் முழுமையான பிளவு ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்றைய கூட்டத்தொடரிலேயே சிவி சண்முகம் எடப்பாடிக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் இந்த உடைவு தமிழக அரசியலில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: செங்கோட்டையன் மீது மனைவி கொடுத்த புகார்!! சொன்னா தப்பாகிரும்!! அவ்ளோ மோசமான ஆளு! இபிஎஸ் விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share