கோவைக்கு குறி வைக்கும் அண்ணாமலை!! வெற்றி வாய்ப்புகள் என்ன?!! ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!
கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை அண்ணாமலை மேற்கொண்டார். அங்கு பா.ஜனதாவுக்கு ஆதரவு எப்படி உள்ளது. அங்கு கடந்த கால தேர்தல்களில் பெற்ற வாக்குகள் சதவீதம் உள்ளிட்டவை குறித்தும் அவர் அவர்களிடம் கேட்டறிந்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் 2026 அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியின் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கொங்கு மண்டலம் இந்த கூட்டணிக்கு முக்கிய பலமாகக் கருதப்படும் நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தனது தொகுதியை இறுதி செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்காநல்லூர் தொகுதி பாஜக நிர்வாகிகளை தனது கோவை இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்திய அண்ணாமலை, தற்போது கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அங்கு பாஜகவுக்கு எப்படியான ஆதரவு உள்ளது, கடந்த தேர்தல்களில் பெற்ற வாக்கு சதவீதம், தொகுதியின் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் 4.50 லட்சம் வாக்குகள் பெற்ற அண்ணாமலை, இந்த முறை சட்டசபைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. அவர் முக்கியமாக சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய இரு தொகுதிகளை கவனத்தில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்! பியூஸ்கோயல் தமிழகம் வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடுகள் இறுதி?!
சிங்காநல்லூரில் தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர். ஜெயராம் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளதால், அண்ணாமலை கவுண்டம்பாளையம் பக்கம் நோக்கம் திருப்பியுள்ளதாக பேசப்படுகிறது.
கவுண்டம்பாளையம் தொகுதியில் பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி. அருண்குமார் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில், அண்ணாமலை அங்கு களமிறங்கினால் பெரும் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில், பாஜக இந்த முறை கோவையில் 2 தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும், அண்ணாமலை ஒரு தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில வட்டாரங்கள் அண்ணாமலையை திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் போட்டியிடுமாறு வலியுறுத்துவதாகவும் செய்திகள் உள்ளன.
கொங்கு மண்டலத்தில் அதிமுக-பாஜக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், அண்ணாமலையின் தொகுதி தேர்வு இரு கட்சிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அவரது முடிவு விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு கோவை அரசியல் களம் முழுமையாக சூடுபிடிக்கும்.
இதையும் படிங்க: சிங்காநல்லூர் கேட்கும் அண்ணாமலை! பல்லடம் தரும் எடப்பாடி! தேஜ கூட்டணியில் டொகுதி பங்கீடு இழுபறி!