×
 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... வாட்ஸ்அப் ஆதாரங்களை தோண்டி எடுக்கும் போலீஸ்...!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்ப்பதாகக் கூறி ரூ.40 லட்சம் பறித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் புகாரியை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தன்னை சேர்த்துவிடுவதாகக் கூறி, காவல் ஆய்வாளர் புகாரியும், அவருடன் இருந்த சீனிவாசன் என்பவரும் தொடர்ந்து தன்னிடம் பணம் பறித்து வருவதாக தொழிலதிபர் அகில்குமார் என்பவர் சில தினங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் யானைகவுனி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆய்வாளர் புகாரியும், சீனிவாசனும் இணைந்து அகில்குமாரிடம் சுமார் ரூ.40 லட்சம் வரை பணம் பறித்திருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அவரிடம் போதைப்பொருள் இருப்பதாகக் கூறி தொடர்ந்து மிரட்டி, அவரிடமிருந்து ரூ.5 லட்சம் வரை பணம் பறித்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

இதையடுத்து காவல் ஆய்வாளர் புகாரி மற்றும் அவருடன் இருந்த சீனிவாசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆய்வாளர் புகாரி ஏற்கனவே பணியிடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இருவரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் மூலம் மூன்று நாட்கள் காவலில் எடுத்து யானைகவுனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, இவர்கள் இருவரும் பல்வேறு தனிப்படைகளில் பணியாற்றி வந்துள்ளனர். அந்தத் தனிப்படைகளில் பணியாற்றிய காலத்தில், வேறு யாரிடமிருந்தும் இதேபோன்று மிரட்டி பணம் பறித்தார்களா என்ற கோணத்திலும் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இருந்து கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் செல்போன் உரையாடல்கள் உள்ளிட்டவற்றை ஆதாரமாகக் கொண்டு இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையில் இடம்பெற்றிருந்த அனைத்து போலீசாரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காவல் ஆய்வாளர் புகாரியும் சீனிவாசனும் இணைந்து, இதுபோன்ற வழக்குகளில் சிக்கக்கூடிய நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் அடிப்படையில், அவர்கள் யார் யாரிடமிருந்து எவ்வளவு பணம் பெற்றுள்ளனர், இதன்மூலம் எத்தனை கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளனர், அந்தச் சொத்துகளை எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ என்ட்ரி... தடை நீங்கியதால் மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share