தலைமைச்செயலக வரலாற்றிலேயே முதல் முறை... ஸ்ட்ரிக்ட்டாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் விஜய்...!
தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை இன்று முதல் அமல்
தமிழ்நாடு தலைமைச் செயலக வரலாற்றில் முதல் முறையாக, அரசு ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் மனிதவள மேலாண்மைத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இன்றிலிருந்து பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்று காலை பணிக்கு வந்த அனைத்து பணியாளர்களும் பயோமெட்ரிக் முறையில் தங்களது வருகையைப் பதிவு செய்த பின்னரே பணியைத் தொடங்கியதை காண முடிந்தது.
பொதுவாக அரசு அலுவலகங்களில் வருகைப் பதிவேடு நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த பதிவேட்டில் கையொப்பமிட்டு ஊழியர்கள் தங்களது பணியைத் தொடங்குவது வழக்கம். ஆனால், ஜூன் 1ஆம் தேதி முதல் மனிதவள மேலாண்மைத் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் உட்பட அனைத்து அலுவலர்களும் பயோமெட்ரிக் முறையில் வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி முறிவா.? 27 ஆம் தேதி கூடுகிறது மதிமுக பொதுக்குழு..! பரபரக்கும் அரசியல்..!
பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையில் முக அடையாளம் காணும் வசதியும், கைரேகை மூலம் வருகையைப் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மனிதவள மேலாண்மைத் துறையில் மட்டுமே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக மற்ற துறைகளுக்கும் இந்த முறை விரிவுபடுத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகம், அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் 54-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பழைய தலைமைச் செயலகக் கட்டிடம் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளிட்ட வளாகங்களில் மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அரசு ஊழியர்களின் பணிநேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு பணிக்கு வரும் ஊழியர்கள் குறைந்தபட்சம் மாலை 5.45 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். அவர்களின் வருகை மற்றும் பணிநேரத்தை துல்லியமாக கண்காணிக்கும் நோக்கத்திலேயே இந்த பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஆட்சிக் காலத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இதேபோன்ற பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தலைமைச் செயலக ஊழியர் சங்கங்களின் எதிர்ப்பால் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
தற்போது புதிய அரசின் ஆட்சிக் காலத்தில், தலைமைச் செயலக வரலாற்றிலேயே முதல் முறையாக பயோமெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறைக்கு வந்துள்ளது. மனிதவள மேலாண்மைத் துறை என்பது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நிர்வாகம், திறன் மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மை தொடர்பான முக்கிய பொறுப்புகளை மேற்கொள்ளும் துறையாகும். அதனால் முதல்கட்டமாக அந்தத் துறையிலேயே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் மற்ற துறைகளிலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு என்பது ஏற்கனவே பரிச்சயமான ஒன்றாகும். ஆனால் அரசு அலுவலகங்களில் இதுவரை வருகைப் பதிவேடு மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது பயோமெட்ரிக் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பயோமெட்ரிக் முறையில் வருகையைப் பதிவு செய்வதுடன், வழக்கம்போல வருகைப் பதிவேட்டிலும் ஊழியர்கள் கையொப்பமிட வேண்டும் என்ற உத்தரவும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நடைமுறை தற்போது மனிதவள மேலாண்மைத் துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீதிக்கட்சியின் முன்னோடிக்கு புகழஞ்சலி..! சர் ஏ.டி. பன்னீர்செல்வம் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை..!!