வாகனமில்லா தினம்! இனி சைக்கிள்ல வாங்க!! அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!
நாடு நமக்கு நிறைய கொடுத்திருக்கிறது. இப்போது நாம் நாட்டிற்குத் திருப்பிக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதட்டங்கள் மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், ஆந்திரப் பிரதேச அரசு ‘என் நாடு, என் பொறுப்பு’ என்ற பெயரில் பெரிய அளவிலான சிக்கன நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “நாடு நமக்கு நிறைய கொடுத்திருக்கிறது. இப்போது நாம் நாட்டிற்குத் திருப்பிக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது” என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களில் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரத்தை அதிக அளவில் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். குறிப்பாக, அரசு அலுவலகங்களில் ஏர் கண்டிஷனர் (ஏசி) பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையில்லாத மின்சார விரயத்தைத் தவிர்க்கவும், அலுவலகங்களில் ஒளி மற்றும் பிற மின்சாதனப் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எம்.பி ஆகிறார் அண்ணாமலை! ஆந்திராவில் இருந்து வரும் வாய்ப்பு! கட்சி மேலிடம் தனி கவனிப்பு!
மேலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாநிலம் தழுவிய வாகனம் இல்லா தினத்தை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் சைக்கிள் பயன்படுத்தி பயணம் செய்ய வேண்டும். இதன் மூலம் பெட்ரோல் நுகர்வைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்த சிக்கன நடவடிக்கைகள் தற்காலிகமானவை அல்ல என்றும், நாட்டின் தற்போதைய சூழலுக்கு ஏற்ப நீண்டகால அணுகுமுறையாக மாற்றப்படும் என்றும் வலியுறுத்தினார். அரசு செலவுகளை ஒழுங்குபடுத்தி, முக்கிய திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆந்திர அரசின் இந்த சிக்கன போக்கு பிற மாநில அரசுகளுக்கும் முன்மாதிரியாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. உலக அளவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், மக்களும் இந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் ஆந்திராவில் பொருளாதார ஒழுக்கத்தை வலுப்படுத்தும் என்றும், மக்களிடையே சிக்கன உணர்வை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நானும் திராவிடன்தான்!! அத மறந்துராதீங்க!! சென்னையில் சந்திரபாபு நாயுடு தீவிர பிரசாரம்!