புனித ஜார்ஜ் கோட்டைக்கு குட் பை? சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்! கிடைத்தது க்ரீன் சிக்னல்!
போர்ஷோர் எஸ்டேட் என்ற பெயரில் அறியப்பட்ட இந்தப் பகுதி, பின்னர் தமிழில் பட்டினப்பாக்கம் என பெயர் மாற்றம் பெற்றது.
சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலகம் சென்னையின் முக்கியமான கடலோரப் பகுதிகளில் ஒன்றான பட்டினப்பாக்கத்தில் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான இடம் தொடர்பாக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனைகளில் பட்டினப்பாக்கம் முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, தலைமை செயலகத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது. சட்டசபையில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய தலைமை செயலகமாக செயல்படும் புனித ஜார்ஜ் கோட்டை பாரம்பரிய கட்டடமாக தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து புதிய தலைமை செயலகம் எங்கு அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் உள்ள போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25.16 ஏக்கர் பரப்பளவில் கட்டடத்தை அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா கைவிட்டுச் சென்ற திட்டம்! வேகம் காட்டும் முதல்வர் விஜய்?! பரபரக்கும் பட்டினப்பாக்கம்!
மேலும், வருவாய்த்துறைக்கு சொந்தமான கூடுதல் நிலங்களையும் இணைத்து மொத்தம் சுமார் 26.5 ஏக்கர் பரப்பளவில் வளாகம் அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 20 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்புடன், 15 மாடிகளைக் கொண்ட பிரமாண்ட கட்டடமாக இது உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுமான செலவு தொடர்பாக வெளியான மதிப்பீட்டின்படி, ஒரு சதுர அடிக்கு ரூ.22,000 என்ற அடிப்படையில் மொத்த மதிப்பு சுமார் ரூ.2,047 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கம் பகுதி சாந்தோம் முக்கிய சாலையுடன் எளிதில் இணையும் வகையில் இருப்பதும் இந்த இடத்தின் முக்கியமான சாதகமாக பார்க்கப்படுகிறது.
புதிய தலைமை செயலகத்துக்காக பட்டினப்பாக்கம், கிண்டியில் உள்ள தேசிய ஆராய்ச்சி நிலையம் மற்றும் நந்தம்பாக்கத்தில் பின்டெக் சிட்டி அருகிலுள்ள பகுதி என மூன்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் 1958-ல் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் 1963 முதல் 1998 வரை சுமார் 1,380 அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் இங்கு கட்டப்பட்டன. பழமையான கட்டடங்கள் தற்போது சிதிலமடைந்துள்ளதால், அவற்றை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
போர்ஷோர் எஸ்டேட் என்ற பெயரில் அறியப்பட்ட இந்தப் பகுதி, பின்னர் தமிழில் பட்டினப்பாக்கம் என பெயர் மாற்றம் பெற்றது.
இதையும் படிங்க: பிளான் பண்ணிட்டீங்களா? தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்! சென்னை மக்களே அலர்ட்!