கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா கைவிட்டுச் சென்ற திட்டம்! வேகம் காட்டும் முதல்வர் விஜய்?! பரபரக்கும் பட்டினப்பாக்கம்!
சென்னை பட்டினப்பாக்கத்தில், முதல்வர் விஜய் வீட்டின் அருகே, புதிய தலைமை செயலகம் அமைக்க ஆய்வு பணி நடந்து வருகிறது.
சென்னை: தமிழகத்தின் நிர்வாக மையமாக விளங்கும் தலைமை செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமை செயலகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு அதிகாரிகள் முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தலைமை செயலகத்தில் இடநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமை செயலகத்தின் சில பகுதிகள் ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பதால், நிர்வாக தேவைகளுக்கான இடவசதியை விரிவுபடுத்துவதிலும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, கடந்த காலங்களில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களும் தலைமை செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து பல்வேறு திட்டங்களை பரிசீலித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் திருவல்லிக்கேணி மற்றும் ராணி மேரி கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் தலைமை செயலகம் அமைப்பது தொடர்பாக கடந்த காலங்களில் ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நவோதயா பள்ளிகளுக்கு நிலம் தர முடியாது? உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பரபரப்பு வாதம்!
இதேபோல், பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு நிலத்திலும் புதிய தலைமை செயலகம் அமைப்பது குறித்து முன்பு திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கடலுக்கு மிக அருகில் இருப்பதால் சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் தாக்கம் ஏற்படக்கூடும் என்ற காரணத்தால் அந்த முயற்சிகள் பின்னர் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு நிலம் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிகிறது. புதிய தலைமை செயலகம் அமைக்க அந்த இடம் ஏற்றதாக இருக்குமா என்பது குறித்து அரசு பொறியாளர்கள் முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அந்த பகுதி முதல்வர் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருப்பதும் பரிசீலனையில் முக்கிய காரணியாக இருப்பதாக கூறப்படுகிறது. தலைமை செயலகத்தில் முதல்வரின் அலுவலக அறையை மாற்றுவது தொடர்பாகவும் ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்டினப்பாக்கம் இடம் நிர்வாக ரீதியாகவும், பாதுகாப்பு மற்றும் இயற்கை பேரிடர் அம்சங்களிலும் ஏற்றதாக இருக்கிறதா என்பது குறித்து அடுத்தகட்ட ஆய்வுகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ஆய்வுகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால், புதிய தலைமை செயலகத்திற்கான அடுத்தகட்ட பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் தமிழக தலைமை செயலக இடமாற்ற திட்டம் மீண்டும் வேகம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல் பங்க்குகளில் இனி ‘கூகுள் பே’ கிடையாது? தமிழகம் முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு திடீர் சிக்கல்!