திரையுலகிற்கு பேரிழப்பு... நடிகை சவுகார் ஜானகி மறைவு.! முதல்வர் விஜய் இரங்கல்..!!
நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்தார்.
பழம்பெரும் திரைப்பட நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி திரையுலகையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 94 வயதான அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் உயிரிழந்தார். நடிகர் சங்கத் தலைவர் நசர் இதை உறுதி செய்துள்ளார்.
அவரது உடல் மாலை 5 மணி முதல் தெயனாம்பேட்டையில் உள்ள சென்டாஃப் சாலையில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த செய்தியை அறிந்த தமிழக முதலமைச்சர் விஜய் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்று அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பு என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.சௌகார் ஜானகி 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தார். 1950 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான சவுகாருவில் அறிமுகமான அவர், அதன்பிறகு சௌகார் ஜானகி என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டார்.
இதையும் படிங்க: விடிந்ததுமே சி.விஜய்க்கு செம்ம ஷாக் கொடுத்த சிபிஎம்... தவெகவை அடித்து துவைத்த பெ.சண்முகம்...!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நானூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். புதிய பறவை, எதிர்நீச்சல், நீர்க்குமிழி, தில்லு முல்லு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. 2022 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய ஆளுமைகளுடன் இணைந்து நடித்த சௌகார் ஜானகியின் மறைவு திரையுலகில் ஒரு காலகட்டத்தின் முடிவைக் குறிப்பதாக பலரும் கருதுகின்றனர். அவரது நினைவுகள் திரைப்படங்களிலும் ரசிகர்களின் மனதிலும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இதையும் படிங்க: அமித் ஷாவை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி!