மதிய சாப்பாட்டிற்கு கூட வீட்டிற்கு செல்லாத விஜய்!! டிபன் பாக்சில் வரும் லஞ்ச்! அரசு அதிகாரிகளுக்கு முன்மாதிரி முதலமைச்சர்!
தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகள் சாப்பிடுவது போல் விஜய்யும் மதிய உணவை அவரது அறையிலேயே சாப்பிடுகிறார்.
சென்னை: தமிழக முதலமைச்சராக கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்ற த.வெ.க. தலைவர் விஜய், அரசு ஊழியர் போன்ற கட்டுப்பாடான பணி நேரத்துடன் செயல்பட்டு வருவது அதிகாரிகள் மற்றும் போலீசாரிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு, முதலமைச்சர் விஜய் தினமும் காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகம் வந்து விடுகிறார். ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளையும் அழைத்து, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வருங்காலத்தில் செயல்படுத்த உள்ள புதிய திட்டங்கள் மற்றும் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை எப்படி விரைவாக நிறைவேற்றுவது என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
மிகவும் கவனத்துக்குரிய விஷயம் என்னவென்றால், மதிய உணவுக்கு வீட்டுக்கு செல்லாமல், காலையில் வீட்டில் இருந்து சாப்பாட்டை கையோடு எடுத்து வருகிறார். தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையிலேயே மற்ற அதிகாரிகள் சாப்பிடுவது போல் அவரும் மதிய உணவை உட்கொள்கிறார். உணவுக்குப் பிறகும் தொடர்ந்து துறை வாரியாக ஆலோசனைகளை நடத்துகிறார். மாலை 5 மணிக்கு மேல் தான் வீடு திரும்புகிறார்.
இதையும் படிங்க: அமைச்சரவை அமைக்க தயக்கம் காட்டும் விஜய்!! தவெகவுக்கு தலைவலி தருவது யார்?!
முந்தைய முதலமைச்சர்கள் பெரும்பாலும் மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வருவது வழக்கம். ஆனால், புதிய முதலமைச்சர் விஜய்யின் இந்தப் பணி பாணி அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
“முதலமைச்சர் தினமும் சரியான நேரத்துக்கு வந்து, இரவு வரை பணியாற்றுவதும், அலுவலகத்திலேயே உணவு உட்கொள்வதும் அரசு இயந்திரத்துக்கு புதிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது” என்று உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முதலமைச்சர் விஜய்யின் இந்த கடுமையான உழைப்பும் ஒழுக்கமும் அரசு நிர்வாகத்தில் வேகத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றும் நோக்கில் அவர் தொடர்ந்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அரசு பொறுப்பேற்ற முதல் கட்டத்திலேயே முதலமைச்சர் விஜய்யின் இந்த அர்ப்பணிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது இந்தப் பணி முறை தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்க தாமதிக்கும் முதல்வர் விஜய்! 3,000 கோப்புகள் தேக்கம்!