கோவை திமுகவில் திடீர் திருப்பம்! செந்தில் பாலாஜிக்கு எதிராக திரண்ட நிர்வாகிகள்? வெடித்தது புதிய சர்ச்சை!
கோவையில் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட ரேகா பிரியதர்ஷினி மற்றும் எஸ்.ஆர். பார்த்திபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிர்வாகிகள் மற்றும் கட்சி அமைப்புகளை சந்தித்து கருத்துகளை சேகரித்து வருகின்றனர்.
சென்னை: தமிழக அரசியலில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு திமுகவுக்குள் நடைபெற்று வரும் நிர்வாக மறுசீரமைப்பு தற்போது கோவையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜியை மையமாக வைத்து கட்சிக்குள் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுக தனது அமைப்பை மறுசீரமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதுடன், புதிய நிர்வாக அமைப்பை உருவாக்குவதற்கான கள ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் இதற்காக மாவட்ட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவையை பொறுத்தவரை ஏற்கனவே இருந்த மூன்று மாவட்டங்கள் தற்போது ஐந்து மாவட்டங்களாக பிரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்! அதிகாரிகள் விசாரணை!
இந்த சூழலில், கோவையில் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட ரேகா பிரியதர்ஷினி மற்றும் எஸ்.ஆர். பார்த்திபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிர்வாகிகள் மற்றும் கட்சி அமைப்புகளை சந்தித்து கருத்துகளை சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையே நடைபெற்ற கோவை திமுக செயற்குழு கூட்டத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்காதது கட்சியினரிடையே பேசுபொருளாகியுள்ளது. கோவை மாநகர், வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கு தனித்தனியாக கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், அவர் கலந்து கொள்ளாதது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து சில திமுக நிர்வாகிகள் கூறுகையில், மறுசீரமைப்புக்காக கட்சி பார்வையாளர்கள் கள ஆய்வு நடத்துவதற்கு முன்பாகவே, மாவட்ட அமைப்புகளை தங்களுக்கு சாதகமாக பிரிக்க சில ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டினர். இது கட்சி தலைமையின் அதிகாரப்பூர்வ நடைமுறைக்கு முரணானதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், கோவை அமைப்பு தொடர்பாக செந்தில் பாலாஜியின் தலையீடு குறித்து தலைமையிடம் புகார் அளிக்க மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக செந்தில் பாலாஜியின் தரப்பில் விளக்கம் வெளியாகவில்லை. திமுகவின் தற்போதைய மறுசீரமைப்பு முடிவுகள் கோவை அரசியலில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அடுத்தகட்டத்தில் தெரியவரும்.
இதையும் படிங்க: திமுகவில் திடீர் விரிசல்! ஸ்டாலின், உதயநிதியை சந்திப்பதை தவிர்க்கும் செந்தில் பாலாஜி! விலக முடிவு?!