டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்! அதிகாரிகள் விசாரணை!
பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஆவணங்கள் விசாரணையில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் பார் உரிமம் வழங்குதல், மதுபானங்கள் கொள்முதல் செய்தல் மற்றும் அவற்றை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கின் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் சுமார் 40 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில், வழக்கு விசாரணைக்கு தொடர்புடையதாக கருதப்படும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுகவில் திடீர் விரிசல்! ஸ்டாலின், உதயநிதியை சந்திப்பதை தவிர்க்கும் செந்தில் பாலாஜி! விலக முடிவு?!
சென்னையில் ஆழ்வார்பேட்டையில் தங்கியிருந்த செந்தில்பாலாஜியிடமும் அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று காலை 11 மணியளவில் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் அவர் நேரில் ஆஜரானார்.
டாஸ்மாக் நிறுவனத்தில் பார் உரிமங்கள் வழங்கியதில் விதிமீறல்கள் நடந்ததா, மதுபான கொள்முதல் நடவடிக்கைகளில் முறைகேடு செய்யப்பட்டதா, போக்குவரத்து ஒப்பந்தங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஆவணங்கள் விசாரணையில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று செந்தில்பாலாஜி ஆஜராகியிருப்பது டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அடுத்தகட்ட விசாரணை தீவிரமடைந்துள்ளதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அவரிடம் நடைபெற்ற விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சூடு பிடிக்கிறது டாஸ்மாக் முறைகேடு வழக்கு! ஐஏஎஸ் அதிகாரி விசாகனை நெருங்கும் போலீஸ்! விசாரணை தீவிரம்!