×
 

நாங்கள் வேணுமா? அதிகாரிகள் வேணுமா? எங்கள் ஆதரவால்தான் அரசு நீடிக்கிறது! தவெகவுக்கு CPI(M) செக்!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் செயல்படுகிறார்களா அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அரசு செயல்படுகிறதா என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டதாக எழுந்த சர்ச்சை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம், தமிழக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்க உத்தரவிடப்பட்டதாக கூறப்படும் விவகாரம் சமீபத்தில் சர்ச்சையானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு பின்னால் அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இந்த விவகாரத்தில் தலைமைச் செயலர் சாய்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குறிப்பிட்ட கட்சியின் உறுப்பினர்களை கண்காணிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டதாகவும் கட்சி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: தண்ணீர் இல்லை என்றார்கள்! 2 நாட்களில் கபினி அணை எப்படி நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழுவை விமர்சித்த பெ.சண்முகம்!

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெ. சண்முகம், தலைமைச் செயலர் சாய்குமார் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பிய அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் செயல்படுகிறார்களா அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அரசு செயல்படுகிறதா என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். குஜிலியம்பாறை வட்டாட்சியர், உயர்கல்வி ஆணையர் மற்றும் தலைமைச் செயலர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, தமிழக அரசின் தொடர்ச்சிக்கு இடதுசாரி கட்சிகளின் ஆதரவு முக்கியமானது என்று குறிப்பிட்ட பெ. சண்முகம், “கம்யூனிஸ்டுகள் ஆதரவால்தான் இந்த அரசு நீடிக்கிறது” என தெரிவித்தார். இடதுசாரி கட்சிகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், இந்த விவகாரத்தை தங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளாது என்றும் எச்சரித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ள நிலையில், ஆளும் தரப்பு இதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share