கூண்டோடு விலகல்... நயினார் தலையில் இறங்கியது பேரிடி... கோட்டையை கோட்டை விட்ட தமிழக பாஜக...!
பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் தங்களது ஆதரவாளர்களுடன் கூண்டோடு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
தேசிய தலைமை மீது அதிருப்தி இல்லை என்றும், மாநில தலைமை மீதே அதிருப்தி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலையுடன் இணைந்து வருகின்றனர். இதனிடையில் பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர், தெற்கு மாவட்டத்தின் முன்னாள் தலைவர் வசந்தராஜன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் கூண்டோடு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது வசந்தராஜன் கூறியதாவது: நான் கடந்த 1998ம் ஆண்டு கிளை செயலாளராக பாஜகவில் இணைந்து 28 ஆண்டுகள் பணியாற்றினேன். மன்னர் ஆட்சி, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பாஜக தான். அத்வானி, வாஜ்பாய், மோடிக்கு கீழ் செயல்பட்டோம். இப்போது பாஜகவில் இருந்து விலகுகிறோம். கோவை தெற்கு மாவட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகியுள்ளோம்.
இதையும் படிங்க: அரசியலில் ட்விஸ்ட்..!! "அண்ணாமலை கட்சி... பாஜக உத்தி"..! பெ. சண்முகம் விமர்சனம்..!!
அண்ணாமலையுடன் கைகோர்த்து இன்று இணைந்திருக்கிறோம். நாங்கள் பாஜகவில் இருந்து விலகுவது தமிழகத்தில் பாஜகவிற்கு பின்னடைவு தான். பாஜக படுதோல்வி அடைந்த காலத்தில் இருந்தே அக்கட்சியில் பயணித்தோம். 2011 முதல் 2016 ஆண்டுகளில் பொறுப்பில் இல்லாமல் பாஜகவில் பயணித்தேன்.
மத்திய பாஜகவின் மீது எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் மீது அதிருப்தி உள்ளது. தமிழகத்தில் பாஜகவிற்கு 10% வாக்குகள் உள்ளன. கோவை மாவட்டத்தில் தோல்வியடைந்த மற்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் எங்களிடம் பேசி வருகின்றனர். தேர்தலுக்கு முன்பே அண்ணாமலை இயக்கத்தைத் துவங்கியிருந்தால் அண்ணாமலை கட்சிக்கு வாக்களித்திருப்போம் என்று கூறி வருகின்றனர்.
மக்கள் தற்போது புதிய கட்சிக்காக ஏங்கி வருகின்றனர். இதனால் தான் அண்ணாமலையுடன் இணைந்து இருக்கிறோம். அதே நேரத்தில் எந்த நிர்வாகிகளிடமும் நாங்கள் பாஜகவை விட்டு வர வேண்டும் என்று வலியுறுத்தவில்லை.
நாங்கள் மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டோம். இதற்கு உறுதுணையாக இருந்த பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி. தவெகவினர் வேண்டுமானால் அவர்களுக்கும் திமுகவுக்கும் மட்டும் தான் போட்டி என்று சொல்லிக் கொள்ள முடியும். ஆனால் எங்களுக்கு தமிழகத்தில் யாரும் போட்டி இல்லை. நாங்கள் மாற்று சிந்தனையில் அரசியல் கட்சியை தொடங்குகிறோம். இளைஞர்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறோம்.
தமிழகத்தில் தேசிய சிந்தனை உள்ளது. அதன் அடிப்படையிலேயே தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யப்போகிறோம். அண்ணாமலை இல்லாத பாஜக தொய்வை சந்திக்கப்போகிறது. எங்கள் இயக்கம் தமிழக மற்றும் தமிழ் மண் சார்ந்தே இயங்க இருக்கிறது. பாஜக நல்லது செய்தால் வரவேற்போம். அதே நேரத்தில் பாஜக தவறு செய்தால் அதனை கடுமையாக விமர்சிப்போம்.
இதையும் படிங்க: "717 டாஸ்மாக் கடைகள் உண்மையில் மூடப்பட்டதா...?" தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!