சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!
சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை என குள்ளநரித்தன வேலையில் ஈடுபட்டால் பதவி பறிபோகும் என, தி.மு.க., தலைமை எச்சரித்துள்ளது.
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பல எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், கட்சித் தலைமை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
“குள்ளநரித்தன வேலையில் ஈடுபட்டால் பதவி பறிபோகும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேசமயம், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன.
தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் கருணாநிதி, தி.நகர் ஜெ.கருணாநிதி, எழும்பூர் பரந்தாமன், வில்லிவாக்கம் வெற்றி அழகன், திருவொற்றியூர் கே.பி.பி.சங்கர் உள்ளிட்ட பல தி.மு.க., எம்.எல்.ஏ.க்களுக்கு இம்முறை சீட் வழங்கப்படவில்லை.
இதையும் படிங்க: அன்பழகன் பேரனுக்கு சீட் இல்லையா? அறிவாலயத்தில் சலசலப்பு! திமுக வேட்பாளர் லிஸ்ட்டில் பகீர்!
இதனால் “உழைப்புக்கு மரியாதை இல்லை” என்று கூறி தி.நகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி தனது பகுதி செயலர் பதவியை ராஜினாமா செய்தார். எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் அறிவாலயம் மற்றும் டி.ஆர்.பாலு இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சில எம்.எல்.ஏ.க்கள் உள்ளடி வேலையில் ஈடுபடுவதாக தலைமைக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். “பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தலைமை அறிவித்த வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது உங்கள் பொறுப்பு. இதை செய்யாமல் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளடி வேலை செய்தால், கட்சி பொறுப்புகள் பறிக்கப்படும். கட்சியில் இருந்தும் நீக்கப்படுவீர்கள்” என்று அவர் எச்சரித்துள்ளார்.
தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தபடி, கட்சி 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அமைச்சர்களான கயல்விழி, மனோ தங்கராஜ், காந்தி உள்ளிட்டோருக்கும் சென்னையில் உள்ள பல எம்.எல்.ஏ.க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தியை சமாளிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், சென்னை மண்டலப் பொறுப்பாளரும் எம்.பி.யுமான ஆ.ராஜா, நேற்று எஸ்.ஆர்.ராஜாவை சந்தித்து சமாதானப்படுத்தினார். பின்னர் அவருடன் சென்று தாம்பரம் தொகுதி வேட்பாளர் கிருத்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் தி.நகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதியையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.
தி.மு.க.,-வில் ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தி அலைகள் தேர்தல் பிரச்சாரத்துக்கு சற்று சவாலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கட்சித் தலைமை அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு கட்சியின் ஒற்றுமை முக்கியம் என்று தலைமை வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க: எ.வ.வேலுக்கு எதிராக திரும்பிய வன்னியர்கள்! விவசாயிகளும் கோவம்!! திண்டாட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி!