சாராய ஆலை அதிபர் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி?... இதுதான் உங்க மாற்றமா சி.எம்.சார்...!!
திமுக எம்.பி.யும் பிரபல சாராய ஆலையின் உரிமையாளருமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கத்தை கட்டுப்படுத்துவது தனது அரசின் முக்கிய இலக்கு என்று முதலமைச்சர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பதவியேற்ற முதல் நாளிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை அமைத்ததுடன், போதைப்பொருள் ஒழிப்புக்காக காவல்துறையில் தனி துறையை உருவாக்கும் கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.
போதைப்பொருள் பயன்பாடு காரணமாகவே கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், இளைஞர்களை போதையிலிருந்து மீட்க விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை மெரினாவில் முதலமைச்சர் விஜய் தலைமையில் "ஸ்டார்ட் ரன்... ஸ்டாப் டிரக்ஸ்" என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது. காமராஜர் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த விஜய், பொதுமக்களுடன் இணைந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஓடியதும் கவனம் பெற்றது.
இதையும் படிங்க: பேராசிரியர் நியமனங்களில் குளறுபடி..! பணத்தாசைக்காக இப்படியா..? நயினார் நாகேந்திரன் கண்டனம்.!
ஆனால், ஒருபுறம் போதைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில், மறுபுறம் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடுவது எப்போது என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியதாக வெளியான தகவல்களும் அரசியல் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளன.
இந்த சூழலில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் மகனும், "அக்கார்ட் டிஸ்டில்லரீஸ் அண்ட் புரூவரீஸ் பிரைவேட் லிமிடெட்" நிறுவனத்தை நிர்வகித்து வருபவருமான ஜே. சந்தீப் ஆனந்த் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் முக்கிய தனியார் மதுபான உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக அக்கார்ட் டிஸ்டில்லரீஸ் கருதப்படுகிறது. இந்த நிறுவனம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதாக நீண்ட காலமாக அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த பின்னணியில்தான் சந்தீப் ஆனந்தின் அரசியல் வருகை கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. இந்த மதுபான ஆலையை சந்தீப் ஆனந்த் தான் தற்போது நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலில் திமுக சார்பில் வேளச்சேரி தொகுதியில் களமிறங்க சந்தீப் ஆனந்த் காய் நகர்த்தினார். ஆனால் கட்சி தலைமை மீது ஏற்கனவே வாரிசு அரசியல் சாயம் தீவிரமாக இருந்ததால், இந்த முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் கடும் அப்செட்டில் இருந்த அவர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதோடு மட்டுமல்லாமல், இளைஞர் அணி தலைவராக பொறுப்பு வழங்க வேண்டும் என அவர் கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் அனுபவம் இல்லாத ஒருவர் நேரடியாக முக்கிய பொறுப்பை கோருவது சரியான அணுகுமுறையா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு புறம், மதுபான தொழிலுடன் தொடர்புடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், இளைஞர்களை வழிநடத்தும் பொறுப்புக்கு வருவது, போதைக்கு எதிராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் கட்சியின் கொள்கையுடன் பொருந்துமா என்ற கேள்வியையும் பலர் எழுப்புகின்றனர்.
போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, இந்த தகவல் அரசியல் ரீதியாக புதிய சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, மதுபான உற்பத்தி நிறுவனத்துடன் தொடர்புடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் வருகை, கட்சியின் போதை ஒழிப்பு நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் கேள்விக்குள்ளாக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
எனினும், ஜே. சந்தீப் ஆனந்த் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுவது தொடர்பாகவோ, அவருக்கு இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கப்படுவது தொடர்பாகவோ இதுவரை கட்சித் தலைமையிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி, பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இதையும் படிங்க: சம்பந்தமில்லாதவர் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதி..! இதான் மாற்றமா..? முதல்வரை வறுத்தெடுத்த ஜெயக்குமார்..!!