சம்பந்தமில்லாதவர் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதி..! இதான் மாற்றமா..? முதல்வரை வறுத்தெடுத்த ஜெயக்குமார்..!!
தமிழ்நாட்டின் பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டதை ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு நியமனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், முக்கியமான ஒன்றாக டெல்லியில் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக கே. வெங்கடநாராயணாவை நியமித்திருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த நியமனம் அரசாணை மூலம் நடைபெற்றது. கே. வெங்கடநாராயணா, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் இறுதி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் ஆவார். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட KVN Productions நிறுவனத்தின் நிறுவனர் இவர். சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட், செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர், கம்பெனி செயலாளர் மற்றும் சட்டப் பட்டதாரி என பல தகுதிகள் கொண்ட இவர், கர்நாடகாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் எனக் கூறப்படுகிறது.
அவரது நிறுவனம் பெங்களூரில் உள்ளது மற்றும் கன்னட மொழியிலும் புலமை பெற்றவர். தமிழ்நாட்டில் காவிரி நீர் பங்கீடு பிரச்னை நீண்டகாலமாக தொடர்கிறது. கர்நாடகா மாநிலத்துடன் இடையறாத பேச்சுவார்த்தைகள், உச்ச நீதிமன்ற வழக்குகள், போராட்டங்கள் என பல்வேறு கட்டங்களில் தமிழ்நாட்டின் உரிமைக்காக போராட்டம் நடைபெற்று வருகிறது. மேகதாது அணை உள்ளிட்ட புதிய திட்டங்கள் தமிழ்நாட்டின் விவசாயத்தையும், குடிநீர் தேவையையும் பாதிக்கும் என அச்சம் நிலவுகிறது. இத்தகைய சூழலில், கர்நாடகா பின்னணி கொண்ட ஒருவரை டெல்லியில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நியமிப்பது, மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளிலும், காவிரி விவகாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். தகுதி உள்ளவர்கள் யாரும் தமிழக வெற்றி கழகத்தில் இல்லையா என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த நியமனத்தை விமர்சனம் செய்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத ஒருவர் தமிழ்நாட்டின் பிரதிநிதி என்றும் கூறினார். ஆட்சி அமைக்க அனுமதி கோரி, ஆளுநர் மாளிகை சென்ற போதே தனது கடைசி படத்தின் தயாரிப்பாளரை அழைத்து சென்ற முதல்வர், தற்போது அவரை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆக்கியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!
தமிழ்நாட்டை சார்ந்த தங்களின் கட்சிக்காரர்களே பலர் இருக்க இந்த முக்கிய பொறுப்பை தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத ஒரு தயாரிப்பாளருக்கு தருவது தான் உங்கள் மாற்றமா என்று கேள்வி எழுப்பினார். கேரள மருத்துவ கழிவுகள் விவகாரம், கர்நாடகவின் மேகதாது பிரச்சனை, மத்தியிலும் கல்விக்கான நிதி விவகாரம் போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்கும் நிலையில் டெல்லிக்கான தமிழ்நாட்டின் சிறப்பு பிரதிநிதி, முதல்வருக்கு தெரிந்தவராக இருப்பதை விட தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டின் பிரச்சினைகளையும் தெரிந்தவராக இருப்பதே முக்கியம் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!