எம்.ஆர்.விஜயபாஸ்கரால் தவெகவுக்கு வந்த வினை... ஆதாரங்களை திரட்டி ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த திமுக..!
குதிரைப் பேரம் தொடர்பாக, தமிழக ஆளுநரிடம் திமுக சார்பில் மேலும் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில், தமிழக பொறுப்பு ஆளுநரை நேரில் சந்தித்து குதிரைப் பேரம் தொடர்பாக இரண்டாவது முறையாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்த கருத்துகளை மேற்கோள் காட்டியும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக வெற்றிக் கழகம் விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும் கூறி, ஆளுநர் அர்லேகரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், "தமிழக வெற்றிக் கழகம் தங்களை அணுகியது; அதன் பிறகே நாங்கள் அந்தக் கட்சியில் இணைந்தோம்" என்று பேசியதாகக் கூறப்படும் கருத்தை சுட்டிக்காட்டி, திமுக சார்பில் மீண்டும் ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எ.வ.வேலுவிற்கு இடியை இறக்கிய சி.எம்.விஜய்... நிம்மதி பெருமூச்சு விட்ட செந்தில் பாலாஜி...!
திமுக வழக்கறிஞர் மருது கணேஷ் மற்றும் கட்சியின் மற்ற வழக்கறிஞர்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்று இந்த மனுவை அளித்தனர். அவர்களிடம் காவல்துறையினர் தேவையான விவரங்களை கேட்டறிந்த பிறகு, ஆளுநர் மாளிகைக்குள் அனுமதித்தனர்.
திமுக தரப்பில், உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் இந்த புகார் மனு தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.அந்த மனுவில், ஏற்கனவே வழங்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன், புதிய தகவல்களையும் இணைத்து பரிசீலிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து குதிரைப் பேரம் நடைபெற்று வருவதாகவும், ஆளும் கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு போதுமான ஆதரவு இல்லாததால், திமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அணுகி, தங்களது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு வற்புறுத்தப்படுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக ஏதேனும் பணப் பரிவர்த்தனை அல்லது பிற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே, "குதிரைப் பேரத்திற்கு வழிவகுக்கும் சூழ்நிலையில் நான் ஆட்சி அமைக்க எந்தக் கட்சியையும் அழைக்க மாட்டேன்" என்று ஆளுநர் தெரிவித்திருந்ததாகவும், தற்போது கண்முன்னே குதிரைப் பேரம் நடைபெற்று வருவதாகவும், தங்களது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களையே அணுகி பேசப்படுவதாகவும் திமுக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் ஆளுநர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக அளிக்கப்பட்ட முதல் புகார், வைகோவின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்பட்டது. தற்போது அளிக்கப்பட்டுள்ள இரண்டாவது புகார், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இத செஞ்சு முடிச்சே ஆகணும்! ஆட்சியே அத நம்பிதான் இருக்கு!! தவெகவினருக்கு முதல்வர் விஜய் முக்கிய உத்தரவு!